திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது 1929ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 98வது ஆண்டு ஆஸ்கர் விழா மார்ச் 16ஆம் தேதி நடக்கிறது.
இந்த விழாவில் ஆங்கில மொழி திரைப்படங்களை தவிர்த்து சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film) என்ற பிரிவில் மற்ற நாட்டு மொழி படங்களுக்கு விருது கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு நாட்டில் இருந்தும் தங்களது நாட்டின் அதிகாரப்பூர்வ படம் என ஒரு படத்தை தேர்வு செய்து அனுப்புவார்கள். அந்த வகையில் இந்தாண்டு இந்தியாவில் இருந்து இந்தி படமான ‘ஹோம்பவுண்ட்’(Homebound) படம் அனுப்பட்டது.
இப்படம் தகுதி பட்டியல் வரை சென்றது. இந்த நிலையில் நாமினேஷன் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் இப்படம் இடம் பெறவில்லை. மாறாக பிரேஸில், ப்ரான்ஸ், நார்வே, ஸ்பெயின் மற்றும் துனிஷா நாட்டு படங்கள் இடம் பெற்றுள்ளது. இதனால் இந்த பிரிவில் விருதை தவறவிட்டது ஹோம்பவுண்ட். இந்த பிரிவில் இதுவரை இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட படங்களில் மதர் இந்தியா (1957), சலாம் பாம்பே (1988) மற்றும் லகான் (2001) ஆகிய இந்தி படங்கள் தான் நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Follow Us