தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் நிவேதா பெத்துராஜ். மதுரையைச் சேர்ந்த இவர் துபாயில் வளர்ந்தவர். உலக அழகி போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். திரைத்துறையில் தினேஷ் நடிப்பில் வெளியான ‘ஒரு நாள் கூத்து’ படம் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், தொடர்ந்து பொதுவாக எம்மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக ஏ.எல். விஜய் இயக்கத்தில் 2023ஆம் ஆண்டு வெளியான பூ (Boo) படத்தில் நடித்திருந்தார். மேலும், வெங்கட்பிரபு இயக்கத்தில் அவர் நடித்துள்ள 'பார்ட்டி' படம் நீண்ட காலமாக வெளியாகவில்லை. திரைத்துறையைத் தாண்டி கார் ரேஸ் மற்றும் பேட்மிட்டன் ஆகிய விளையாட்டுகளில் ஆர்வமிக்கவராக இருக்கிறார். சமீபத்தில் தெருநாய் விவகாரம் தொடர்பாக நாய்களுக்கு அதராவ நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.
இவர் கடந்த ஆகஸ்டில் ரஜித் இப்ரான் என்பவரை காதலிப்பதாக தனது இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்திருந்தார். ரஜித் இப்ரான் துபாயை சேர்ந்த தொழிலதிபர் என கூறப்படுகிறது. நிவேதா பெத்துராஜ் துபாயில் வளர்ந்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது. இருவருக்கும் இந்தாண்டுக்குள் திருமணம் நடைபெறும் எனவும் அதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அப்போது தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் இப்போது திருமணம் வரை இவர்களின் காதல் செல்லவில்லை என தெரிகிறது.
நிவேதா பெத்துராஜ் தனது காதலரை அறிமுகப்படுத்திய பதிவை தற்போது நீக்கியுள்ளார். மேலும் அவரை அன்பாலோவும் செய்துள்ளார். இப்ரானும் நிவேதா பெத்துராஜ் உடன் எடுத்த புகைப்படத்தை நீக்கி அவரை அன்பாலோ செய்துள்ளார். இவர்களது திருமணம் திடீரென நின்றிருப்பதாக தெரியும் சூழலில் ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியாக இருக்கிறது.
Follow Us