பிரபல நடிகை நித்யா மேனன் கடைசியாக தனுஷ் இயக்கி நடித்த ‘இட்லி கடை’ படத்தில் நடித்திருந்தார். மேலும் தனுஷுடன் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்தற்காக தேசிய விருது வென்றிருந்தார். பல்வேறு இந்திய மொழிகளில் கவனம் செலுத்தி வரும் அவர், தற்போது புது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
‘கியூரி புரொடக்ஷன்’ என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ளதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்த அவர், இது தொடர்பாக ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், “கதைகளை சொல்வதை விட அதை படமாக எடுப்பது என்னை பொறுத்தவரை மேல். அறிவை விட ஆழமான இடத்தில் மக்களை சென்றடைய வேண்டும்.
நான் கிரியேட்டிவ் பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது எனக்குள்ளும் அதை பார்ப்பவர்களுக்குள்ளும் ஒரு மாற்றம் உருவாகும். இந்த மாற்றம் அமைதியாக நடக்கும். நான் நடிக்கத் தொடங்கிய முதல் நாளிலிருந்தே தயாரிப்பது எனது செயல்முறையாகவும் நோக்கமாகவும் இருந்தது. அந்த நோக்கத்தை தொடர்வேன்” என்றார். இவருக்கு தற்போது திரை பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றார்கள். மேலும் அவரது முதல் படத் தயாரிப்பு அறிவிப்பு குறித்து எதிர்பார்க்கின்றனர்.
Follow Us