கடந்த 13ஆம் தேதி தவெக தலைவர் விஜய் குறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகை த்ரிஷாவிடம் இருந்து விஜய் வெளியே வர வேண்டும் எனவும் விஜய் அவரது குடும்பத்தோடு நல்ல உறவு வைக்க வேண்டும் எனவும் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
நயினார் நாகேந்திரனின் இந்த நாகரீகமற்ற பேச்சு சர்ச்சையானது. இதற்கு பலரும் தற்போது கண்டனம் தெரிவிக்க தொடங்கியுள்ளனர். ஏற்கனவே திமுக பெண் எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து த்ரிஷா தரப்பில் அவரது வழக்கறிஞர் நித்யயேஷ் நடராஜ் கண்டன அறிக்கை வெளியிட்டார். அதில், அரசியலில் உயர் பதவியில் வகிக்கும் ஒருவரால் இதுபோன்ற மோசமான மற்றும் பொருத்தமற்ற கருத்து தெரிவிக்கப்படும் என்று த்ரிஷா எதிர்பார்க்கவில்லை என்றும் எந்த அரசியல் கட்சியுடனும் அவருக்கு தொடர்பில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தேவையில்லாத விஷயங்களுக்கு த்ரிஷா பெயரை பயன்படுத்த தேவையில்லை எனவும் கூறியுள்ளார். இந்த அறிக்கையை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த த்ரிஷா, “அவமரியாதை எப்போதும் வெளிப்படுத்தப்பட வேண்டும்” எனப் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னுடைய அரசியல் வாழ்க்கையில் எந்த ஒரு தனி நபர் விமர்சனத்தையும் அனுமதிப்பதில்லை, நானும் அப்படி பேசியதில்லை. அன்றைக்கு நான் பேசியது வாய் தவறி வந்தது. இது குறித்து வானதி ஸ்ரீனிவாசன் ஏற்கனவே என்னிடம் பேசி இருந்தார். பின்பு தமிழக பாஜக முன்னாள் தலைவரும் என்னிடம் பேசினார். இந்த விவகாரத்தில் நான் பேசியது யார் மனதையேனும் வருத்தப்பட்டிருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றுள்ளார்.
Follow Us