ஜப்பான் படத்திற்கு பிறகு மிகப்பெரிய சறுக்கலை சந்தித்த இயக்குநர் ராஜூ முருகன், தன்னுடைய பழைய பாதைக்கு திரும்பும் படியாக தற்பொழுது ‘மை லார்ட்’ படம் மூலம் களத்தில் குதித்து இருக்கிறார். இந்தப்படம் அவருக்கு இழந்த பெயரை மீட்டுக் கொடுத்ததா, இல்லையா?
கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்யும் அனாதையான சைத்ரா வை, இன்னொரு அனாதையான சசிகுமார் திருமணம் செய்து கொள்கிறார். சைத்ராவுக்கு அவ்வப்போது வயிற்று வலி ஏற்பட அதற்காக ஒரு மருத்துவமனைக்கு செல்ல அங்கு பல லட்சம் ரூபாய் செலவாகும் என டாக்டர்கள் கூறி விடுகிறார்கள். இதனால் மனம் நொந்து போன சசிகுமார் வட்டிக்கு வாங்கி அந்த பணத்தை செலவு செய்கிறார். இதற்கிடையே அந்த ஊரில் ஏழை எளிய மக்களை ஏமாற்றி ஒரு மிகப்பெரிய கும்பல் கிட்னி திருட்டு வேலையை செய்து வருகிறது. அந்த கும்பலை சேர்ந்த ஒருவனிடம் தான் சசிகுமார் வட்டிக்கு வாங்குகிறார். இதன் பிறகு வட்டி கட்ட முடியாமல் தவிக்கும் அவரை பணம் கொடுத்த நபர் கணவன் மனைவி இருவரும் தங்களுடைய கிட்னியை கொடுத்து அந்த கடனை அடைக்குமாறு மிரட்டுகிறார். இதனால் பயந்து ஊரை விட்டு சென்றுவிடும் சசிகுமார் மற்றும் சைத்ரா தாங்கள் இறந்து விட்டதாக கூறி பணம் கொடுத்த நபர் போலி ஆவணங்களை சமர்ப்பித்து இன்சூரன்ஸ் பணத்தை அவரே பெற்றுக்கொண்டு சசிகுமார் குடும்பத்தை ஏமாற்றி விடுகிறார். இதனால் திரும்ப அதே கோவில்பட்டிக்கு வரும் சசிகுமார் மற்றும் அவரது மனைவி சைத்ரா இவர்களை எதிர்த்து அரசாங்கத்திடம் போராடுகிறார்கள்.
அந்த நேரம் பார்த்து மனைவி சைத்ராவிடம் இருந்து ஒரு கிட்னி காணாமல் போய் இருப்பதை சசிகுமார் குடும்பம் கண்டுபிடித்து அதிர்ச்சியாகின்றனர். இதற்கிடையே ஒரு மிகப்பெரிய மத்திய மந்திரிக்கு உடனடியாக கிட்னி தேவைப்படுகிறது. அந்தக் கிட்னி சசிகுமார் உடைய கிட்னியுடன் நன்றாக ஒத்துப்போக அவரிடம் கிட்னி பேரம் பேசுகின்றனர். சசிகுமாரோ தான் கிட்னி கொடுத்தால் என்னுடைய அனைத்து பிரச்சனையும் தீர்க்க வேண்டும் என உத்தரவிடுகிறார். அவர்களும் சரி என ஒத்துக் கொண்டு சசிகுமாரிடமிருந்து கிட்னியை அபகரிக்க திட்டமிடுகின்றனர். இதைத்தொடர்ந்து சசிகுமாரின் பிரச்சனை தீர்ந்ததா, இல்லையா? காணாமல் போன தன் மனைவியின் கிட்னி கிடைத்ததா, இல்லையா? மத்திய மந்திரியின் நிலை என்னவானது? அவர் காப்பாற்றப்பட்டாரா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/14/38-2026-02-14-15-08-40.jpg)
இயக்குநர் ராஜூ முருகன் தனக்கு என்ன வருமோ அந்த மாதிரியான ஒரு கதையம்சத்தை கொண்ட ஒரு திரைப்படமாக இந்த படத்தை உருவாக்கி அதே சமயம் கமர்சியல் அம்சங்களுக்காக மற்ற தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி இரண்டு விதமாக கலந்து கட்டி அதோடு தன்னுடைய பாணி மாறாமல் சமூகத்துக்கு அவசியமான படமாகவும் ஜனரஞ்சகமான படமாகவும் இப்படத்தை கொடுத்து பாஸ் மார்க் வாங்கியிருக்கிறார். முதல் பாதி ராஜூ முருகன் படமாகவும் இரண்டாம் பாதி கமர்சியல் அம்சங்கள் கொண்ட ராஜூ முருகன் படமாகவும் அமைந்து இந்த படம் ரசிக்க வைத்திருக்கிறது. அது படத்திற்கு பிளஸ்ஸாக அமைந்திருப்பது படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறது. படத்தில் ஆங்காங்கே பல்வேறு வேகத்தடைகள் காணப்பட்டாலும் அவை கதையும் திரைக்கதையாலும் ஓரளவு மறக்கடிக்கப்பட செய்து பார்ப்பவர்களை படத்துடன் ஒன்றை வைத்திருக்கிறது.
சசிகுமார் சில பல நாட்களாகவே சிறப்பான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது மை லார்ட் படமும் இணைந்து இருக்கிறது. தனக்கு கொடுத்த வேலையை மிக சிறப்பாக செய்து பார்ப்பவர்களை அனுதாபப்படும் படி தன் நடிப்பின் மூலம் ஈர்த்து இருக்கிறார். இவரைக் காட்டிலும் நாயகி ‘3 பிஎச்கே’ படப் புகழ் சைத்ரா நடிப்பில் பின்னி பெடலெடுத்து இருக்கிறார். சின்ன சின்ன முகபாவனைகள் மூலம் கதாபாத்திரத்தை தாங்கி பிடித்து இருக்கிறார். இவருக்கும் சசிகுமாருக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட்டாகி படத்தையும் தூக்கி நிறுத்தி இருக்கிறது. பத்திரிகையாளராக வரும் குரு சோமசுந்தரம் வழக்கம்போல் தன்னுடைய ட்ரேட்மார்க் நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். மத்திய அமைச்சராக வரும் ஆஷா ஷரத் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து கவனம் பெற்று இருக்கிறார். மற்றபடி உடனடித்த அனைத்து நடிகர்களுமே அவரவர் வேலையை சிறப்பாக செய்துவிட்டு சென்று இருக்கின்றனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/14/39-2026-02-14-15-08-58.jpg)
ஷான் ரோல்டன் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சிறப்பாக அமைந்திருக்கிறது. படத்தில் வரும் ஒரு மெலடி பாடல் சிறப்பாக அமைந்திருக்கிறது. நீரவ்ஷா ஒளிப்பதிவில் காட்சிகளில் உயிர் இருக்கிறது. இவரது நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என வள்ளலார் தத்துவத்தை அடிப்படையாக வைத்து இக்கதையை உருவாக்கி இருக்கும் ராஜூ முருகன் அதை சிறப்பான முறையில் கொடுத்து குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் மனம் உருகும்படி அதை அழகாக கதைக்குள் ஒன்ற வைத்து பார்ப்பவர்களை கண்கலங்க வைத்திருக்கிறார்.
மை லார்ட் - மனித நேயம்!
Follow Us