கடந்த 2012ஆம் ஆண்டு பிரபல நடிகர் மோகன்லால் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது எர்ணாகுளத்தில் உள்ள அவரது வீட்டில் யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. யானை தந்தங்களுக்கு முறையான சான்றிதழ் இல்லாததால் கைப்பற்றப்பட்டது. அதை வருமான வரித்துறையினர், வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக மோகன்லால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

Advertisment

இதையடுத்து மோகன்லால், தன் வீட்டில் கைப்பற்றப்பட்ட யானை தந்தங்களை மீண்டும் ஒப்படைக்குமாறு அப்போதைய கேரள வனத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை வைத்தார். பின்பு 2015ஆம் ஆண்டு வனத்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு மோகன்லாலிடம் மீண்டும் தந்தங்கள் ஒப்படைக்கப்பட்டன. அடுத்த ஆண்டு அதற்கான உரிமமும் வழங்கப்பட்டது. இதனால் வனத்துறை வழக்கை ரத்து செய்தது.

Advertisment

இந்த சம்பவம் தொடர்பாக பெரும்பாவூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதில் மோகன்லால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளூபடி செய்த நீதிமன்றம் வழக்கின் இறுதி அறிக்கையை பெரும்பாவூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதனிடையே மோகன்லாலுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ் சட்ட விரோதமாக வழங்கப்பட்டது என பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ள நிலையில் மோகன்லலுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ் சட்டப்பூர்வமானது அல்ல என தெரிவிக்கப்பட்டு உரிமத்தை நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் மோகன்லாலுக்கு புதிய சான்றிதழ் வழங்க அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்தது.  

Advertisment