ராஜூ முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மை லார்ட்’. ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்துள்ள இப்படத்தில் சைத்ரா, ஆஷா சரத், குரு சோமசுந்தரம், ஜெயபிரகாஷ், இயக்குநர் கோபி நயினார், வாசு மித்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையில் இதுவரை ‘எச காத்தா’ மற்றும் ‘ராசாத்தி ராசா’ ஆகிய பாடல்கள் வெளியாகின. படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. கிட்னி திருடும் கும்பலை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருப்பது தெரிய வந்தது. 

Advertisment

இப்படம் வரும் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி நடந்த செய்தியாளர் சந்திப்பில் படக்குழுவினருடன் இயக்குநர் மாரி செல்வராஜும் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், “இந்த படம் பார்த்துவிட்டு நானும் என் உதவி இயக்குநர்களும் பயங்கரமாக விவாதித்தோம். எளிய மக்களுடைய கடைசி ஆயுதம் என்று படம் முன் மொழிவது சரியா? தவறா? என பேசினோம். எனது உதவி இயக்குநர்களுக்கும் பயங்கர குழப்பம் இருந்தது. இங்கு நிலை நிறுத்தப்பட்ட ஒரு மிகப்பெரிய தத்துவம், நம்மை அடக்கி ஆளுகிற பொழுது அதை எப்படி வென்றெடுக்க வேண்டும் என்ற குழப்பம் இருந்தது. 

Advertisment

இந்தப் படம் எல்லாத்தையும் நாம் தான் இழக்கணுமா என்ற கேள்வியை முன் வைக்கிறதா என உதவி இயக்குநர்கள் என்னிடம் கேள்வி கேட்டனர். அதற்கு நான் சொன்னேன், ஒரு பேரிருள் நம்மை சூழும் போது பெரும் வெளிச்சத்தை பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு நாம் உள்ளாக்கப்படுகிறோம்... இந்த கண்ணோட்டத்தில் இந்த படத்தை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் என்றேன். கிட்டத்தட்ட எனக்கு பெரிய வெளிச்சமாகத்தான் இந்த படம் இருந்தது. படத்தின் முடிவு என்னை ஒரு தர்க்கத்துக்கு உள்ளாக்கியது. இதை நான் ஏற்றுக் கொள்ள வேண்டுமா வேண்டாமா என்ற கேள்வி எழுந்தது. என்னுடைய முழு இரவை இப்படம் யோசிக்க வைத்தது” என்றார். 

தொடர்ந்து சசிகுமார் குறித்து பேசிய அவர், “தொடக்க காலத்தில் என்ன கதையை கொண்டு வரப் போகிறாரோ என்று... சசிகுமாரின் படங்களை பார்த்தால் பயப்படுவேன். ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு அவர் கொண்டு வந்த கதைகள் அவருடைய மார்க்கெட் உள்ள எந்த நடிகரும் கொண்டு வராத கதைகள். நந்தன், அயோத்தி, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களை தொடர்ந்து இந்த படம் ஒரு உச்சமாக அவருக்கு இருக்கும். என் உதவி இயக்குனரிடம் கதை யோசிக்கும் போதே சசிக்குமார் இருக்கார் தைரியமாக யோசியுங்கள் என சொல்லும் அளவுக்கு அவர் வந்திருக்கிறார். அவருக்கு என் நன்றி” என்றார். 

Advertisment