மாரி செல்வராஜ் - துருவ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘பைசன்’ படம் கடந்த 17ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியானது. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

Advertisment

நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படக்குழுவினர் தியேட்டர் விசிட் அடித்து ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். 

Advertisment

அந்தவகையில் சென்னை, மதுரை, தென்காசி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளை தொடர்ந்து சேலத்தில் இன்று மாரி செல்வராஜ், அமீர், ரஜிஷா விஜயன் ஆகியோர் ஒரு திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்தனர். பின்பு செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர். அப்போது மாரி செல்வராஜிடம் ரஜினி வாழ்த்து கூறியதை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த அவர், “என்னுடைய எல்லா படத்துக்குமே ரஜினி சார் தொடர்ந்து வாழ்த்து சொல்லியிருக்கார். பைசன் பார்த்துவிட்டு ஃபோன் பண்ணினார். ரொம்ப சந்தோஷப்பட்டார். படம் பார்த்து முடிச்சவுடனே இவ்வளவு உழைப்பை ஒரு படத்துக்கு போடுவது என்பது ஆச்சரியமாக இருக்கிறது என்பது தான் அவருடைய முதல் ரியாக்‌ஷன். ஒரு இயக்குநரா உங்களுடைய ஆளுமை வெளிப்படுகிறது என்றார். துருவவை ரொம்ப பாராட்டினார். இவ்வளவு சிறு வயதில் முதிர்ச்சியான உழைப்பை போட்டிருப்பதாக சொன்னார். ஒட்டுமொத்த படக்குழுவையும் பாராட்டி பேசினார்” என்றார்.  

Advertisment

பின்பு அவரிடம் ரஜினியுடன் இணைந்து படம் பண்ண வாய்ப்பிருக்கிறதா எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அவருக்கும் எனக்கும் அடிக்கடி உரையாடல்கள் நடந்திருக்ககு. என்னுடைய முதல் படத்தில் இருந்து பேசிக்கொண்டு இருக்கார். என்னை அவருக்கு பிடிக்கும். என் மேல ஒரு நம்பிக்கை வச்சிருக்கார். அது நிகழ்ந்தா பெரிய படமாக அது இருக்கும். அப்படி அவர் அழைத்தால் அந்தப் படம் அவருக்கு ஏற்றதாக இருக்கும்” என்றார். முன்னதாக இருவரும் ஒரு படம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தினர். அது சுமூகமாக முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.