அரசியலில் தீவிரம் காட்டி வரும் விஜய், சினிமாவுக்கு முழுக்கு போடவுள்ள நிலையில் அவரது நடிப்பில் கடைசிப் படமாக உருவாகியுள்ளது  ‘ஜன நாயகன்’. இப்படம் 2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனிடையே 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகிறார். 

Advertisment

இந்த நிலையில் விஜய் மக்கள் போராட்டம் செய்யவில்லை என நடிகரும் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி தலைவருமான மன்சூர் அலிகான் கூறியுள்ளார். சென்னை பல்லாவரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது விஜய் அரசியல் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார். அவர் பதிலளிக்கையில், “விஜயை நானும் முதலில் ஆதரித்தேன். ஆனால் பின்பு அவர் யாரால் இறக்கிவிடப்பட்டவர் என தெரியவந்தது. அவர் எம்ஜிஆர் போன்று மக்கள் போராட்டம் செய்து வந்திருந்தால் ஒட்டுமொத்த நாடும் அவரோடு நின்றிருக்கும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. 

Advertisment

அவர் ஒரு சிறந்த நடிகர். அதனால் நடிகராகத்தான் விஜய்யை மக்கள் பார்க்க விரும்புகிறார்கள். ஜனநாயகன் விஜயின் கடைசி படம் என்பதால் இனிமேல் அவர் நடிக்க மாட்டார் என அவர் மீது மிகுந்த அன்போடு இருக்கிறார்கள். அதற்காக அரசியலுக்கு அவர் வரக்கூடாது என்றும் ஆட்சியைப் பிடிக்கக் கூடாது என்றும் நான் சொல்லவில்லை. அவர் களத்தில் இறங்கி போராட வேண்டும். நாங்களும் களத்தில் இருப்போம்” என்றார்.