இந்திய சினிமாவில் 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து 50 ஆண்டுகளை கடந்து பயணித்தவர் மனோரமா. நாடக மேடைகளில் தொடங்கி திரைப்படங்களில் நாயகி கதாபாத்திரம், நகைச்சுவை கதாபாத்திரம் என ஏகப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர், கடந்த 2015ஆம் ஆண்டு மறைந்தார்.
மனோரமாவுக்கு பூபதி என்ற ஒரே மகன் இருந்தார். இவரும் திரைத்துறையில் விசு நடித்த ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். ஆனால் அவருக்கு அப்படம் தொடர்ச்சியான வாய்ப்பினை பெற்றுத்தரவில்லை. இருப்பினும் அதற்கடுத்து சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் அதுவும் பெரிதாக வெற்றிப் பெறவில்லை. இதையடுத்து தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.
இந்த நிலையில் பூபதி, உடல் நலக்குறைவால் சமீபகாலமாக அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழலில் இன்று காலை மூச்சுத்திணறல் காரணமாக மறைந்துள்ளார். இவரது உடல் சென்னையில் அவர் வாழ்ந்த தி.நகர் இல்லத்தில் வைக்கப்படுகிறது. நாளை இறுதி சடங்கு நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.