தனுஷின் 55வது படம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. அதில் அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கவுள்ளதாகவும் தயாரிப்பாளர் அன்புச் செழியனின் கோபுரம் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் பூஜையும் போடப்பட்டது.
பின்பு எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்த நிலையில் நாயகியாக சாய் பல்லவியிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. அடுத்து சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியானது. அதில் இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும் ஆர் டேக் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனமும் இணைந்து தயாரிப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அடுத்தடுத்து அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சாய் அபயங்கர் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளதாகவும் நடிகை ஸ்ரீ லீலாவும் இப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து சாய் பல்லவி இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி இணைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படம் மூலம் தனுஷும் மம்மூட்டியும் இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கவுள்ளனர். இதற்கு முன்னதாக 2013ஆம் ஆண்டில் மலையாளத்தில் வெளியான ‘பிராப்பிரியட்டர்ஸ்: கம்மத் & கம்மத்(Proprietors: Kammath & Kammath) எனும் படத்தில் நடித்திருந்தனர். இதில் மம்மூட்டி மற்றும் திலீப் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து தனுஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தில் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு கேரளாவிலும் நல்ல ஓபனிங் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow Us