இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பிரபல ஆங்கில ஊடகத்தில் சமீபத்திய பேட்டியில் பாலிவுட் திரையுலகில் மத ரிதியிலான பாகுபாடுகள் இருப்பதாக தெரிவித்திருந்தார். அவர் அந்த பேட்டியில் கூறியதாவது, “பாலிவுட்டில் படைப்பாற்றல் இல்லாத மனிதர்கள் கையில் அதிகாரம் சென்றுள்ளது. அவர்கள் தான் யார் இசையமைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறார்கள். கடந்த 8 ஆண்டுகளில் இந்த மாற்றம் மிகப்பெரியதாக இருக்கிறது. நான் வேலைக்காக யாரையும் தேடி செல்வதில்லை. வேலையில் இருக்கும் நேர்மை தான் எனக்கு வாய்ப்புகளை தேடித் தருகிறது. எனக்கு வாய்ப்புகள் குறைவதற்கு மத ரீதியான பாகுபாடு காரணமாக இருக்கலாம். ஆனால் அது என் முகத்துக்கு நேராக நடந்ததில்லை. ஆனால் அதுபோன்ற தகவல்கள் என் காதுக்கு வருகிறது.

Advertisment

90களில் ரோஜா, பம்பாய், தில் சே போன்ற படங்களை விட ‘தாள்’ படம் தான் வட இந்தியாவில் என்னுடைய இசையை ஒவ்வொரு வீட்டிலும் கொண்டு சேர்த்தது. ஆனால் அப்போது நான் இந்தி பேசியதே இல்லை. ஒரு தமிழராக தமிழ் மீது மிகுந்த பற்று இருப்பதால் இந்தி கற்றுக் கொள்வது கடினமாக இருந்தது. ஆனால் இயக்குநர் சுபாஷ் கய் என்னை நீண்ட காலம் நிலைத்து நிற்க வேண்டும் என்று இந்தி கற்றுக்கொள்ள சொன்னார். நானும் சரி என சொல்லி இந்தியோடு சேர்த்து இந்திக்கு தாயாக விளங்கும் உருது மொழியையும் கற்றுக் கொள்கிறேன் என்றேன்” என்றார். 

Advertisment

ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த கருத்து சினிமா வட்டாரத்திலும் அரசியல் வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியது. பிரபல இந்தி பாடலாசிரியர், ஜாவேத் அக்தர், நடிகை மற்றும் எம்.பி. கங்கனா ரனாவத் உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தனர். இதனிடையே ஜம்மு காஷ்மீரை சேர்ந்த முன்னாள் முதல்வர், மெஹபூபா முப்தி, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இதனிடையே ஏ.ஆர்.ரஹ்மான், இந்தியா தான் தன்னுடைய வீடு, யாரையும் புண்படுத்த விரும்பியதில்லை என வீடியோ வெளியிட்டிருந்தார். இருப்பினும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக இன்னமும் கருத்துகள் உலா வருகிறது. 
 

இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்தரா, ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டதாவது, “அன்புள்ள ஏ.ஆர். ரஹ்மான், இந்தியா உங்களது தாய். பாஜக-வினர் உங்களை கட்டாயப்படுத்தி சொல்ல சொல்லும் சலாம் அந்த தாயிக்கு தேவையில்லை. உமர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், அலிகான் மஹ்மூதாபாத் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார், அக்லாக் கொல்லப்பட்டார். அதனால் நீங்கள் மௌனமாக இருக்கக்கூடாது. எட் சல்லிவன், முஹம்மது அலி போன்றோர் நட்சத்திரங்களாக இருந்தபோதிலும், நேர்மையாக நின்று தப்பிப்பிழைத்தனர். வந்தே மாதரம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment