ரஜினியின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில் கடந்த ஆண்டு ‘பாரத் சேவா’ என்ற அமைப்பை தொடங்கினார். இதன் மூலம் பல்வேறு திட்டத்தின் கீழ் நலத் திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். இந்த அமைப்பின் முதலாம் ஆண்டு நிறைவு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் மக்கள் மேடை என்ற திட்டத்தையும் அவர் தொடங்கினார்.

Advertisment

இந்நிகழ்ச்சியில் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அந்த வகையில் இந்த சேவையை அரசியலுக்கு பயன்படுத்துவீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்ட நிலையில், “அரசியலையே எல்லாரும் தவறாக புரிந்து கொள்கிறார்கள். நம்ம ஊரில் ஜனநாயகம் என்பது ஒரு பக்கம் ராஜ்ஜியம். இன்னொரு பக்கம் மக்கள். மக்கள் அனைவரும் ஒன்றாக இருந்தால் நாடு சுபிக்‌ஷம் அடையும். நாங்கள் மக்கள் பக்கம் நிற்கிறோம்” என்றார். 

Advertisment

பின்பு அவரிடம் 68 வயதில் சமூக சேவை செய்வதற்கு குடும்பம் எவ்வளவு ஆதரவாக இருக்கிறது என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஒரு வீட்டில் கணவருடைய சப்போர்ட் இல்லாமல் ஒரு பெண் எதையுமே செய்ய முடியாது. அண்ணன்கள், தங்கைகள், குழந்தைகள், பேரக்குழந்தைகள்... இவர்கள் எல்லாரும் நம்முடைய எண்ணங்களை கேட்டு ஊக்கம் கொடுக்காமல் யாருமே எதையும் செய்ய முடியாது. அதற்கு முதலில் என் கணவருக்கு தலை வணங்கி நன்றி தெரிவிக்கிறேன். என்னுடைய முயற்சிகளை அவருக்கு அர்ப்பணிக்கிறேன்” என்றார்.