யுரேகா லெமூரியன் இயக்கத்தில் பாபு மோசஸ் கதையில் உருவாகியுள்ள படம் ‘லட்சுமி - லாரன்ஸ் காதல்’. இந்த படத்துக்கு தணிக்கை வாரியம் சான்று கொடுக்க மறுத்தது. இதனை எதிர்த்து பட நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கில், தற்போது தணிக்கை வாரியம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இதில், “சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்க முடியாது. சான்றிதழ் மறுக்கப்பட்டது ஒரு தனிப்பட்ட காட்சி அல்லது உரையாடலை அடிப்படையாகக் கொண்டது அல்ல.
இப்படம் ஒட்டுமொத்தமாக, சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரைத் தொடர்ந்து, இழிவுபடுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. பொது அமைதியைக் குலைத்து, சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் தன்மை கொண்ட, சமூக அமைதியின்மையைத் தூண்டக்கூடிய படைப்புகளை கருத்துச் சுதந்திரம் என அனுமதிக்க முடியாது” என விளக்கமளித்துள்ளது. இந்த வழக்கு, வரும் 11ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
Follow Us