உத்திர பிரதேசத்தில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறது கும்பமேளா. அந்த வகையில், கடந்த மகாகும்பமேளாவில் ருத்ராட்ச மாலை மற்றும் பாசிமணி விற்கும் ஒரு பெண்ணின் வீடியோ வைரலானது. இதனைத் தொடர்ந்து அவர் ஒரே நாளில் பிரபலமானார், அவர் பெயர் மோனலிசா போஸ்லே. இவர் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரை சேர்ந்தவர். தனது கண்களாலும், பாசிமணிகளை விற்பனை செய்யும் தோரணையின் மூலமாக பெரும்பாலான மக்களிடையே கவனம் பெற்றார். இதன் காரணமாக, அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு பெற்றார். அந்த வகையில், அவர் தற்போது, ‘தி டைரி ஆப் மணிப்பூர்’ படத்தின் மூலம் அறிமுகமாகி நடித்து வருகிறார். 

Advertisment

இதனிடையே, இவர் பல விளம்பர படங்களில் நடித்து வருகிறார். ஓடிடி நிறுவனங்களில் இவரை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் பல கடை திறப்பு விழாக்களிலும் இவர் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில், இவர் இந்தி மொழி தவிர்த்து தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்போது பல மொழிகளில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகிய நிலையில், பிஸியான நடிகையாக வலம் வருகிறார். 

Advertisment

இந்நிலையில், அவர் ஒரு பேட்டியில், “கும்பமேளாவின் மூலமாக எனது வாழ்க்கை இப்படி மாறும் என்று எதிர்பார்க்கவில்லை. திடீரென்று கிடைத்த புகழின் மூலமாக எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால், எனக்குப் பொறுப்பும் அதிகரித்துள்ளது. என்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்தது இந்த சமூகம் தான். இந்த சமூகத்திற்கு என்னால் முடிந்ததைச் செய்ய விரும்புகிறேன். அதனால், நான் பிறந்த ஊரில் பெண்களுக்கென்று ஒரு பள்ளிக்கூடம் கட்டவேண்டுமென்று விரும்புகிறேன். இதை எனது முதல் பட சம்பளத்தின் மூலம் நிச்சயம் கட்டுவேன்.  கல்வி மூலமாகத் தான் சமூகத்தில் நல்ல மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறேன். எனவே, எனது வருமானத்தைக் கல்விக்காகச் செலவு செய்ய விரும்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.