தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021, 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் திரைப்படத் துறையில் 2021ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, அரங்க அமைப்பாளர் ஜே.கே.எனும் ஜெயகுமார், சண்டைப் பயிற்சியாளர் சூப்பர் சுப்புராயன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
அதே போல் 2022ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருதுகள், நடிகர் விக்ரம் பிரபு, நடிகை ஜெயா வி.சி.குகநாதன், பாடலாசிரியர் விவேகா, செய்தித் தொடர்பாளர் டைமண்ட் பாபு மற்றும் புகைப்படக் கலைஞர் லட்சுமிகாந்தன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து 2023ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருதுகள், நடிகர் மணிகண்டன், குணச்சித்திர நடிகர் ஜார்ஜ் மரியான், இசையமைப்பாளர் அனிருத், பின்னணிப் பாடகி ஸ்வேதா மோகன், நடன இயக்குநர் சாண்டி என்கிற சந்தோஷ் குமார், செய்தித் தொடர்பாளர் நிகில் முருகன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. சிறப்பு விருது பிரிவில் வழங்கப்படும் எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதுபின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸுக்கு அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் அறிவிக்கப்பட்ட கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கலைஞர்களுக்கு விருது கொடுத்து சிறப்பித்தார். அவரிடம் விருது அறிவிக்கப்பட்ட அனைவரும் விருது வாங்கி மகிழ்ந்தனர். அந்த வகையில் சிறப்பு விருது பிரிவில் அறிவிக்கப்பட்ட பாடகர் கே.ஜே.யேசுதாஸுக்கு பதில் அவரது மகன் பாடகர் விஜய் யேசுதாஸ் வாங்கிக் கொண்டார். இதனிடையே யேசுதாஸ் காணொளி வாயிலாக தோன்றி முதல்வருக்கு நன்றி கூறினார். மேலும் அமெரிக்காவில் தான் இருப்பதாகவும் அங்கிருந்து இந்தியா வருவதற்கு தாமதாகி வருவதால் வர முடியவில்லை என்றும் பதிவு செய்தார்.