வயது மூப்பு காரணமாகவும், மூச்சுத் திணறல் காரணமாகவும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் நல்லகண்ணு (101) நேற்று(25-02-26) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

Advertisment

அவரது உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு வைக்கப்பட்டுள்ள தோழர் நல்லகண்ணுவின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தவெக தலைவர் விஜய், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, கனிமொழி எம்.பி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இயக்குநர் ரஞ்சித், கவிஞர் வைரமுத்து, நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் தோழர் நல்லகண்ணுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Advertisment

இந்த நிலையில் நடிகர் கார்த்தி தனது எக்ஸ் பக்கம் வாயிலாகவும் நேரில் சென்றும் அஞ்சலி செலுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “சுதந்திரப் போராட்டத்தின் தீப்பொறியாகத் தொடங்கி, வாழ்நாள் முழுவதும் சமூகநீதி, விவசாயம், நீர், மண் உரிமைக்காக அயராது போராடியவர் நல்லகண்ணு அய்யா. எளிமையே உயரமாக மாறுகிறது என்பதை வாழ்ந்து காட்டிய அசாத்திய மனிதர். அவரது பெயரை உச்சரிக்கும் தருணத்திலேயே ஒரு பக்தி கலந்த மரியாதை எழுகிறது; காலம் அவரது பெருமையை என்றும் சொல்லிக் கொண்டிருக்கும். வாழ்க அவரது புகழ்” என்று குறிப்பிட்டுள்ளார். 

அதே நேரம் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இவரைப் போன்ற ஒரு தலைவர் மிகவும் அரிதான தலைவர். மக்களுக்காகவும் மக்கள் பிரச்சினைக்காகவும் இறங்கி நின்று சட்டப் போராட்டம் செய்து அதற்கான தீர்வையும் கொண்டு வந்திருக்கிறார். விவசாய மக்களுக்காகவும் ஒடுக்குமுறை நடக்கும் இடத்திலும் நேராக சென்று போராடியவர். இது போன்ற தலைவர்கள் இருந்தார்கள் என்று கொஞ்ச காலம் கழித்து சொன்னால் கூட யாரும் நம்ப மாட்டார்கள். 101 வயது வரையும் அதேபோன்று இருந்திருக்கிறார். தனக்கு என்று எதையுமே வைத்துக் கொள்ளாமல் பணத்தை பெரிதாக மதிக்காமல் மக்களுக்காக கொடுக்கும் தலைவரை பார்ப்பது மிகவும் அரிது. அவருடைய இறப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய இழப்பு” என்றார். 

Advertisment