‘காந்தாரா’ படத்தில் நாயகியாக நடித்து கவனம் பெற்ற சப்தமி கௌடா, பொது நிகழ்வுகளில் நடிகைகளை தவறான கோணங்களில் புகைப்படம் எடுக்கப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “சினிமா துறையில் பெண்களுக்கு நடக்கும் தொடர்சியான பிரச்சனைகளை சரி செய்ய நாங்கள் ஒன்றாக இணைந்துள்ளோம். பொது நிகழ்வுகளில் நடிகைகளின் உடல் தவறாக படம் பிடிக்கப்பட்டு பகிரப்படுகிறது. ஒரு சில தனிநபர்களால் செய்யப்படும் இந்த விஷயம், அவமரியாதைக்குரியது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/04/418-2026-03-04-12-47-41.jpg)
நாங்கள் சினிமாவுக்காக இங்கே இருக்கிறோம். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அவை கண்ணியத்தின் மீறல், அவற்றை இயல்பாக்கவோ அல்லது பொறுத்துக்கொள்ளவோ ​​முடியாது. இந்த மாதிரியான நிகழ்வுகள் தொழில்முறை சார்ந்தும், அடிப்படை மரியாதை மற்றும் கண்ணியம் சார்ந்து இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த எல்லையை நிர்ணயிப்பதில் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம். இதை அனுபவித்த ஒவ்வொரு பெண்ணுடனும் நாங்கள் ஒற்றுமையுடன் நிற்கிறோம். மேலும் மரியாதை கேட்பதில் நாங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவளிப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து இந்த குறிப்பை கன்னட நடிகைகள் ருக்மிணி வசந்த், ஆஷிகா ரங்கநாத் மற்றும் திவ்யா ஸ்பந்தனா தங்களது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இதில் ஆஷிகா ரங்கநாத், அந்த குறிப்பை மேற்கோள்காட்டி “மரியாதையை இயல்பாக்குவோம் - மீறலை அல்ல” என இன்னொரு பதிவையும் போட்டுள்ளார்.
Follow Us