காந்தாரா பட வெற்றியைத் தொடர்ந்து அதன் முந்தைய கதையை வைத்து உருவாகியுள்ள ‘காந்தாரா ஏ லெஜண்ட் - சாப்டர் 1’ படம் கடந்த 2ஆம் தேதி கன்னடம், தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் வெளியானது. ஹொம்பாலே நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ருக்மிணி வசந்த், குல்ஷன் தேவயா, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று முதல் வாரத்தில் உலகளவில் ரூ.509 கோடி வசூலித்துள்ளது. இப்போது வரை ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக படத்தின் பிரம்மாண்ட காட்சிகளும் விஷுவல் எஃபெக்ட்ஸும் பிரம்மிப்பூட்டும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர். சமீபத்தில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்திருந்தார். பின்பு இந்தியக் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் படத்தை பாராட்டி தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத் படத்தை பாராட்டியுள்ளார். எக்ஸ் வலைதளத்தில் ஒரு பயனரின் பதிவிற்கு கமெண்ட் தெரிவித்த அவர் படத்தை பாராட்டும் வகையில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். முதலில் அந்த ரசிகர், இமயமலையில் வாழும் மக்கள் கொண்டாடும் ஒரு விழாவின் வீடியோவை பகிர்ந்து, “காந்தாரா படத்தில் காட்டியது நிஜம். இந்தப் படத்தைப் பார்க்கும் வரை, எனக்கு தென்னிந்தியாவைப் பற்றித் தெரியாது, ஆனால் என்னை நம்புங்கள், இமயமலையில் பிறந்த ஒவ்வொருவரும் கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயங்களை உணர்ந்திருக்கிறார்கள். மேலும் அதை பார்த்திருக்கிறார்கள்.
இங்குள்ள தேவ கலாச்சாரம் உண்மையிலேயே தெய்வீகமானது, மேலும் இந்தப் படம் இந்து மதத்தின் பரந்த தன்மையையும், மக்கள் தெய்வங்களுடன் கொண்டிருக்கும் ஆழமான தொடர்பையும் அழகாகக் காட்டுகிறது. இவ்வளவு ஒரு அற்புதமான படத்தை கொடுத்ததற்கு வாழ்த்துக்கள் ரிஷப் ஷெட்டி” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவிற்கு கீழ் கமெண்ட் செய்துள்ள கங்கனா ரனாவத், “இது போன்ற படங்கள் பழங்குடியின மதமாற்றத்தைத் தடுப்பதற்கும் முக்கியமானதாக அமையும்” எனப் பதிவிட்டுள்ளார்.