இன்று பெரியாரின் 52 ஆவது நினைவு நாள் மற்றும் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 38 வது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், பல்வேறு தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இருவருக்கும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் பெரியார் மற்றும் எம்ஜிஆர் இருவரோடு சேர்த்து ஆய்வாளர் தொ. பரமசிவனுக்கும் தனது சமூக வலைதளம் மூலம் அஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “என் வாழ்வின் மூன்று முக்கியமான மனிதர்களின் நினைவு தினம் இன்று.
பெரியார் மறைந்து அரை நூற்றாண்டு ஆகிறது. அவர் பற்ற வைத்த பகுத்தறிவு நெருப்பு சமூகத்தீமைகளைச் சுட்டெரித்துக்கொண்டே இருக்கிறது. தந்தை பெரியார் காட்டிய வழியில் ஒளியில் தமிழ்ச்சமூகம் எந்த ஒடுக்குமுறைக்கும் அஞ்சாமல் வாழ்வாங்கு வாழும்.
இரண்டாமவர் என்றென்றும் என் இதயத்தில் வீற்றிருக்கும் எம்ஜிஆர். கலைவாழ்விலும் பொதுவாழ்விலும் எனக்கு உத்வேகம் கொடுத்தவர். தனது ஈகையினால் லட்சோப லட்சம் இதயங்களில் இன்னும் தொடர்பவர்.
மற்றொருவர் தமிழ்ப் பண்பாட்டின் அறியப்படாத பக்கங்களில் ஒளிபாய்ச்சிய ஆய்வாளர் தொ. பரமசிவன். கடந்த காலத்தைக் கதையாகப் படித்தால் போதாது. அவற்றின் மெய்யான காரண காரியங்களை அறிவதே அறிவுடைமை எனக் கற்பித்த ஆசான். மூன்று ஆசிரியர்களையும் மனம் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/24/17-32-2025-12-24-15-43-44.jpg)