சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியான படம் ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்தில் ரவிமோகன் வில்லனாகவும் ஶ்ரீலீலா நாயகியாகவும் அதர்வா முரளி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இவருக்கு இப்படம் 100வது படமாகும். அதே போல் சிவகார்த்திகேயனுக்கு இது 25வது படம். இப்படம் 1960களில் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் வெடித்த மாணவர்களின் போராட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை எதிர்கொண்ட இப்படம் வசூலில் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை கடந்ததிருந்தது. 

Advertisment

இந்த நிலையில் இப்படம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், “என் மகனுடன் பராசக்தி படத்திற்கு போயிருந்தேன். படம் பார்த்து முடித்த பின்பு அவனிடம் ஒரு கேள்வி கேட்டேன். தமிழ்நாட்டில் மொழி போராட்டம் நடந்ததே அது தெரியுமா என்றேன். எனக்கு தெரியாது என பதில் சொன்னான். அதனால் நான் ரொம்ப அவமானப்பட்டேன். என் கடமையிலிருந்து தவறியவனாக என்னை நான் கருதிக் கொண்டேன். 

Advertisment

மொழிப் போராட்ட வரலாற்றை நாம் கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டும். அது ரொம்ப முக்கியம். ஏன் தெரிய வேண்டும் என சொன்னால், ஆங்கிலம் இல்லாமல் தமிழ்நாட்டை தாண்ட முடியாது. அது எனக்கு தெரியும். ஆனால் தமிழன் மற்ற மொழிகளை எதிர்க்கவும் இல்லை, மாறாக அவன் விரும்பி படிக்கவும் செய்கிறான். என் மொழியின் தொன்மையின் காரணமாக எனக்கு இருக்கும் மொழியின் செருக்கின் காரணமாக மற்றவர்கள் ஒரு மொழியை என் மீது திணித்தால் அதை நான் என்றுமே ஏற்க மாட்டேன். நான் தமிழன் என்று தலை நிமிர்ந்து சொல்... மொழிக்கு ஒரு இழுக்கு வரும் போது உன் குரல் உயர வேண்டும். எந்தக் கட்டத்திலும் நம் மொழியின் அருமையை தூக்கிப் பிடிப்பது நமது கடமை. அதை என்றும் மறக்கக்கூடாது” என்றார்.