விஜய் சினிமாவை விட்டு விலகி அரசியல் பயணத்தைத் தொடங்கிய நிலையில், அவரது நடிப்பில் கடைசியாக வெளிவர இருந்த படம் ஜனநாயகன். இந்த படம் கடந்த மாதம் 9 ம் நாள் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாக இருந்தது. இருப்பினும், படத்திற்குத் தணிக்கை சான்று கிடைக்காததால், குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாகவில்லை.
இதையடுத்து, படக்குழு தணிக்கை சான்று கேட்டு நீதிமன்றம் சென்றது. தணிக்கை வாரியமும் இதற்கு எதிராக நீதிமன்றம் செல்ல இவ்விவகாரம் பெரிதாக வெடித்தது. இதில் தணிக்கை வாரியம் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்தனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என மாறி மாறி வழக்கு நடந்து வந்தது. இறுதியாக சென்ன உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கை வாபஸ் பெற்று மறு தணிக்கைக்கு அனுப்ப படக்குழு முடிவெடுத்தது.
அதன்படி தற்போது மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அதன் பணிகள் முடிந்து ரிலீஸாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த நிலையில் கனடா நாட்டில் இப்படத்தை வெளியிடும் யோர்க் சினிமாஸ்(York Cinemas) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், “ஜன நாயகன் திரைப்படம் ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு முன்பு வெளியாகாது. அதனால் உங்களின் முன்பதிவு டிக்கெட்டுகளுக்கான பணத்தைத் திரும்பப் பெற எங்கள் திரையரங்குகளைத் தொடர்பு கொள்ளவும். புதிய வெளியீட்டு தேதி உறுதிசெய்யப்பட்டவுடன், முன்பதிவு தொடங்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.
Follow Us