தவெக தலைவர் விஜய்யின் கடைசி படமான ‘ஜன நாயகன்’ சென்சார் பிரச்சனையால் இன்னும் வெளியாகமலே இருக்கிறது. முதலில் இப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் கடைசி நிமிடம் வரை சென்சார் சான்று கிடைக்காததால், படம் வெளியாகவில்லை. இதனால் சென்சார் கேட்டு படக்குழு நீதிமன்றம் சென்றது. தணிக்கை வாரியமும் இதற்கு எதிராக நீதிமன்றம் சென்றது. படத்தின் இதனால் இவ்விவகாரம் பெரிதாக வெடித்தது.
இந்த விவகாரத்தில் தணிக்கை வாரியம் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்தனர். மேலும் விஜய்க்கு ஆதரவாக திரைப் பிரபலங்கள் பலரும் குரல் கொடுத்தனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என மாறி மாறி சென்றது. இறுதியாக படக்குழு வழக்கை வாபஸ் பெற்று மறு தணிக்கைக்கு அனுப்ப முடிவெடுத்தது. இதனால் படம் விரைவில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மறு தணிக்கை குழு எப்போது படம் பார்ப்பார்கள் என்ற தகவல் இல்லாமல் இருந்தது. பின்பு இன்று மதியம் 2 மணிக்கு பார்ப்பதாக தகவல் வெளியானது.
ஆனால் தற்போது வந்திருக்கும் லேட்டஸ்ட் தகவலின் படி மறு தணிக்கை குழுவியில் இடம் பெறும் ஒரு உறுப்பினருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் இன்று திட்டமிட்டிருந்த மறு தணிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இப்படம் மீண்டும் தள்ளி போகிறது. விரைவில் அடுத்த மறு தணிக்கைக்கான விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நீதிமன்றம் சென்று படம் வெளியாகமல் இருந்ததால் தற்போது மறு தணிக்கைக்கு சென்று விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவும் தற்போது தள்ளிப்போவது விஜய் ரசிகர்களுக்கும் படத் தயாரிப்பு நிறுவனத்துக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us