அரசியலில் தீவிரம் காட்டி வரும் விஜய்,சினிமாவுக்கு முழுக்கு போடவுள்ள நிலையில் அவரது நடிப்பில் கடைசிப் படமாக உருவாகியுள்ளது  ‘ஜன நாயகன்’. வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் வெங்கட் நாராயண தயாரித்துள்ளார். இதில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் , நரேன், கௌதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜூ உள்ளிட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் 2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

Advertisment

ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்திற்கு சென்சார் சான்றிதழ் இன்னும் கிடைக்கவில்லை. அதில் பிரச்சனைகள் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் படத் தயாரிப்பு நிறுவனம், தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று காலை அவசர வழக்கு தொடர்ந்தது. இது பிற்பகல் நீதிபதி ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘படத்துக்காக பெரும் தொகை செலவிடப்பட்டிருக்கிறது. யாரோ ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் சான்றிதழ் அளிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. படம் பார்த்து தணிக்கை குழு சொன்ன, மாற்றங்களை உடனடியாக செய்தும் சான்றிதழ் கிடைக்கவில்லை. யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம் என்ற சட்டப்பிரிவு தணிக்கை வாரிய சட்டத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் சான்றிதழ் வழங்கப்படவில்லை’ என்றும் கூறினார். 

Advertisment

இதையடுத்து தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இந்தப் படத்தில் மத உணர்வுகள் தூண்டும் வகையில் ஒரு காட்சி இருப்பதாக தணிக்கை குழுவுக்கு புகார் வந்திருக்கிறது. அதன் காரணமாகவே சான்றிதழ் வழங்குவது தொடர்பாக மறு தணிக்கை குழுவிற்கு அனுப்பியிருக்கிறோம். குறிப்பிட்ட காலத்திற்குள் சான்றிதழ் வழங்க வேண்டும் என எந்த நிர்பந்தமும் தணிக்கை குழுவிற்கு கிடையாது’ என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, யார் புகார் கொடுத்திருக்கிறார் என்ற விவரத்தை நாளைய தினத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என வழக்கின் விசாரணயை நாளைய தினத்துக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.