கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வா வாத்தியார்’. இதில் நாயகியாக தெலுங்கு இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரண், சத்யராஜ், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் சொத்தாட்சியர் சார்பில் இப்படத்திற்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ‘தொழிலதிபர் அர்ஜுன் லால் சுந்தர தாஸ் என்பவர் திவாலானவர் என சென்னை உயர்நீதி மன்றம் அறிவித்து அவருடைய சொத்துக்களை நிர்வாகிக சொத்தாட்சியரை நியமித்திருந்தது. அவரிடமிருந்து ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தது. அந்தத் தொகை வட்டியுடன் சேர்த்து தற்போது 21 கோடியே 78 லட்சம் 50 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. அந்தத் தொகையை செலுத்த ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை அவர் தயாரித்த வா வாத்தியார் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ‘வா வாத்தியார்’ படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் விசாரணையை டிசம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.
Follow Us