2023ஆம் ஆண்டு வெளியாகி பெரும் சர்ச்சையை உருவாக்கிய படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இப்படத்தின் டீசர் வெளியான சமயத்தில் இருந்தே இப்படம் மத வெறுப்பைத் தூண்டுவதாக சர்ச்சையானது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்களம் உட்பட பல மாநிலங்களில் படத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது. பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் போலீஸ் பாதுகாப்புடன் இப்படம் வெளியானது.
இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்தை சன்ஷைன் பிக்சர்ஸ் தயாரித்திருக்க காமாக்யா நாராயண் சிங் இயக்கியுள்ளார். படம் வரும் 27ஆம் தேதி, அதாவது நாளை வெளியாகிறது. படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி விவாவதத்தை கிளப்பியது. அதில் மூன்று இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் திட்டமிட்டு மூன்று இந்து பெண்களை திருமணம் செய்து மதமாற்றம் செய்ய கட்டாயபடுத்துவதாகவும் அதற்காக அவர்களை கொடூரமாக நடத்துவதாகவும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
குறிப்பாக மாட்டிறைச்சியை வலுகட்டாயமாக சாப்பிட சொல்லி திணிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் எதிர்ப்பை சம்பாதித்தது. மேலும் வெளிப்படையாக மதவெறுப்பை தூண்டுவதாக சமூக வலைதளங்களில் பலரு கருத்து தெரிவித்தனர். இப்படத்தை கேரளா மீண்டும் எதிர்க்கும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். மேலும் இதை ஒன்றாக நாம் அனைவரும் எதிர்க்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இப்படம் மத ஒற்றுமையைச் சீர்குலைப்பதாக கண்ணூரைச் சேர்ந்த ஸ்ரீதேவ் நம்பூதிரி என்பவர் கேரள உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதே போல் பிரிவினை, வன்முறை போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ள இப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்காமல் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால் அதை ரத்து செய்யக் கோரி பலரும் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்த போது படத்​தின் டீசர் மற்றும் டிரெய்லருக்கு தடை விதிக்​கப்​பட்டது.
இதையடுத்து இன்றும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது படத்தின் காட்சிகள் மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் சென்சார் போர்ட் மீண்டும் படத்தை பார்க்க வேண்டும் என்றும் கூறி படத்தை வெளியிட 15 நாட்கள் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
Follow Us