இசையமைப்பாளர் இளையராஜா தனது முதல் சிம்பொனியை கடந்த ஆண்டு மார்ச் மாதம் லண்டனில் அரங்கேற்றினார். ‘வேலியன்ட்’ எனும் தலைப்பில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் உலகின் தலைசிறந்த ஆர்கெஸ்ட்ரா குழுக்களில் ஒன்றான ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா குழுவை வைத்து அரங்கேற்றினார். 

Advertisment

இதன் மூலம் ஆசிய கண்டத்தில் சிம்​பொனியை எழு​தி, சர்வதேச அளவில் அரங்​கேற்​றிய முதல் இசையமைப்பாளர் எனும் வரலாற்றுச் சாதனையை அவர் படைத்​தார். இதையொட்டி பிரதமர் மோடி முதல் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

Advertisment

மேலும் தமிழக அரசு சார்பில் இளையராஜாவுக்கு பாராட்டு விழாவும் எடுத்தது. இந்த விழா அவரின் 50 ஆண்டு கால சினிமா பயணம் தொடர்பாகவும் எடுக்கப்பட்டது. இந்த விழாவில் சிறப்பம்சமாக அவர் லண்டனில் அரங்கேற்றிய சிம்பொனி இசை அதே ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா குழுவால் அரங்கேற்றப்பட்டது. மேலும் இதை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடத்த வேண்டும் என்ற ஆசையை முதல்வர் ஸ்டாலினிடம் இளையராஜா தெரிவித்திருந்தார். அதற்கும் முதல்வரும் சம்மதம் தெரிவித்திருந்தார். இதனால் அது குறித்து அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். 

இந்த நிலையில் அந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது அதன்படி சென்னையில் வரும் மே 30ஆம் தேதி நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இடம், முன்பதிவு ஆரம்பம் உள்ளிட்ட அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் முதல் முறையாக இளையராஜாவின் முதல் சிம்பொனி அரங்கேறவுள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள். சமீபத்தில் இளையராஜா தனது இரண்டாவது சிம்பொனியை எழுதி வருவதாக கூறியிருந்த நிலையில் அது குறித்தான எதாவது அப்டேட் இந்த சிம்பொன் நிகழ்ச்சியில் அறிவிப்பார் எனவும் எதிர்பார்க்கின்றனர். 

Advertisment