பத்ரி படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூமிகா. இதையடுத்து இவர் ரோஜாக்கூட்டம், சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் குறைந்த அளவிலான படங்களில் நடித்திருந்தாலும், அந்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் நடிப்பதை நீண்ட காலமாகத் தள்ளிப்போட்டு வரும் பூமிகா, தற்போது தெலுங்கு படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது அவர் நடித்துள்ள படம் 'யுபோரியா'.
இப்படம் நேற்று (06-02-26) வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஹைத்ரபாத்தில் இந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், திடீரென்று உணர்ச்சி வசப்பட்டார். அதில், "இந்த படத்தில் நடிக்கத் தொடங்கியது முதல், என்னால் இரவில் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை" எனப் பேசிக்கொண்டிருக்கும் போதே அழுது விட்டார். பின்னர், அருகில் இருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தினர். இதனால் நிகழ்ச்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
காரணம், இப்படம் சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படமாகும். இந்த சம்பவம் குறித்தான தாக்கங்கள் அவரின் மனதில் பெருமளவு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தினை, குணசேகர் இயக்கியுள்ளார். மேலும், பூமிகா, சாரா அர்ஜுன், ப்ரித்வி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Follow Us