பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தர்மேந்திரா(89). 1960 ஆண்டு முதல் 2000 ஆண்டு வரை நாயகனாக பல்வேறு ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்தியைத் தாண்டி பஞ்சாபி மொழி உட்பட கிட்டத்தட்ட 300க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவருக்கு பத்மபூஷன் விருதும் இந்திய அரசு வழங்கிய கௌரவித்தது. சினிமாவை தாண்டி அரசியலிலும் இருந்துள்ளார். பிஜேபி சார்பில் 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.
இந்த நிலையில் இவர் சமீபகாலமாக உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். அண்மையில் மூச்சு திணறல் காரணமாக மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக பதிவிட்ட அவரது மனைவியும் பிரபல நடிகையுமான எம்.பி. ஹேமமாலினி, மருத்துவமனையில் தர்மேந்திராவை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் விரைவில் பூரண குணமடைய அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் எனவும் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால் இன்று காலை அவர் உயிரிழந்து விட்டதாக செய்திகள் வெளியானது. இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது அவர் உயிரோடுதான் இருக்கிறார் என ஹேமா மாலினி தெரிவித்துள்ளார்.
ஹேமா மாலினி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “என்ன நடக்கிறது. இது மன்னிக்கவே முடியாது. சிகிச்சைக்கு ஒத்துழைத்து குணமடைந்து வரும் ஒருவரை எப்படி இப்படி தவறாக பொறுப்புள்ள ஊடகங்கள் செய்திகளை வெளியிட முடியும். இது மிகவும் அவமரியாதையான மற்றும் பொறுப்பற்ற செயல். தயவுசெய்து எங்கள் குடும்பத்திற்கு உரிய மரியாதையையும் தனிமையும் கொடுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து ஹேமாமாலினியின் மகளான ஈஷா தியோல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தந்தை இறந்து விட்டதாக வெளியான செய்தி தவறானது எனவும் அவர் நலமுடன் இருக்கிறார் எனவும் பதிவிட்டுள்ளார்.
Follow Us