தமிழகத்தில் பொங்கல் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகிறது. இந்நிலையில் இன்று டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வீட்டு பொங்கல் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் தமிழக பாஜகவை சேர்ந்த நயினார் நாகேந்திரன், தமிழிசை, வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் அண்மையில் வெளியான பராசக்தி படத்தில் நடித்திருந்த நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதையடுத்து சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு மேற்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது சிவகார்த்திகேயன் பேசுகையில், “நம்முடைய கலாச்சாரத்தை டெல்லியில் கொண்டாடுவது ரொம்ப மகிழ்ச்சி. பிரதமர் மோடியை முதல் முறை இன்று நேரில் சந்தித்தேன். அது மறக்க முடியாத தருணமாக இருந்தது” என்றார்.
இந்த விழாவில் ஜிவி பிரகாஷ் திருவாசகம் பாடினார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், “டெல்லியில் நடந்த பொங்கல் விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் திருவாசகம் பாடினேன். விரைவில் அதனை அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us