ஆதிக் ரவிச்சந்திரன் - அஜித் கூட்டணியில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்த இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்த படத்தில் இளையராஜாவின் ‘ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி, இளமை இதோ இதோ’ உள்ளிட்ட பாடல்கள் இடம் பெற்றிருந்தது. இப்பாடல்களை தன்னுடைய அனுமதியின்றி பயன்படுத்தியதாகவும் அதற்கு நஷ்ட ஈடாக ரூ.5 கோடி தர வேண்டும் என்றும், இளையராஜா தரப்பில் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இளையராஜா நோட்டிஸிற்கு தயாரிப்பு நிறுவனம் சார்பில் பதில் நோட்டிஸ் அனுப்பப்பட்டது. அதில் சட்டப்பூர்வமான உரிமையாளர்களிடம் இருந்து பாடல்களுக்கு அனுமதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த உரிமையாளர் யார் என்பதை தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கவில்லை என இளையராஜா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இளையராஜா பாடல்களை படத்தில் பயன்படுத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தும் சில நாட்கள் படத்தில் பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனால் இளையராஜா, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதாக படக்குழுவிற்கு நோட்டிஸ் அனுப்பியதை தொடர்ந்து படத்தில் பாடல்கள் நீக்கப்பட்டது. இதனிடையே நீதிமன்ற விதித்த தடையை நீக்கக் கோரி மைத்ரி மூவி மேக்கர்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது சோனி நிறுவனத்திடம் இருந்து பாடல்களுக்கான உரிமையை பெற்றுள்ளதாகவும் இளைராஜா பாடல்களை படத்தில் இருந்து நீக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளிக்க இளையராஜாவிற்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்திருந்தது.
இந்த வழக்கில் சோனி நிறுவனம் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என தற்போது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் படம் தொடர்பான அனைத்து மனுக்களும் நீதிபதி செந்தில் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பில், சோனி நிறுவனம் தாக்கல் செய்துள்ள இடையீட்டு மனு இன்னும் பட்டியலிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. பின்பு படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில், இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அனைத்து மனுக்கள் மீதான விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.