தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிவந்திருக்கும் மௌன படம். தற்போதுள்ள சூழலில் கதையும் கதாபாத்திரமும் மாஸ் எலிமெண்ட்ஸும் இருந்துமே பல படங்கள் தடுமாறி வரும் வேளையில் வெறும் வசனமே இல்லாமல் மௌன படம் மூலம் ஒரு திரில்லர் படத்தை உருவாக்கி அதை ரசிக்க வைக்கும் முயற்சியில் இந்த காந்தி டாக்ஸ் குழு வெற்றி பெற்றதா, இல்லையா?

Advertisment

மும்பை மாநகரில் மிகவும் ஏழ்மையில் ஒரு பத்துக்கு பத்து இருக்கக்கூடிய அரை கொண்ட ஸ்லம் ஏரியாவில் இருக்கும் வீட்டில் நோயால் படுக்கையில் இருக்கும் தன் தாயுடன் வசிக்கிறார் விஜய் சேதுபதி. அன்றாட உணவுக்கே மிகவும் கஷ்டப்படும் மிக ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த விஜய் சேதுபதிக்கு வேலை கிடைப்பதில் மிகவும் சிரமமாக இருக்கிறது. அதேபோல் தினசரி வாழ்க்கையை நடத்த சல்லி பைசா கூட கையில் இல்லாமல் தவிக்கிறார். இதில் எதுத்த வீட்டில் இருக்கும் அதித்தி ராவோடு காதல் வேறு. 

Advertisment

அதேசமயம் மும்பையில் மிகப்பெரும் தொழிலதிபராக இருக்கும் அரவிந்த்சாமியின் சொத்துக்கள் முழுவதும் கோர்ட் ஏலத்தில் விடுகிறது. தொழிலில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டு நடுத்தெருவுக்கு வரும் சூழலில் இருக்கும் அவருக்கு குடும்பமும் இல்லாமல் தனிமையில் தவிக்கிறார். ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதி ஏழ்மையில் இருந்து தப்பிக்க அரவிந்த்சாமியின் பங்களாவுக்குள் திருட செல்கிறார். அந்த நேரம் பார்த்து கோர்ட் தன் சொத்தை ஜப்தி செய்வதற்குள் இருப்பதை சுருட்டிக் கொண்டு வீட்டை எரித்துவிட்டு எஸ்கேப் ஆக அரவிந்த்சாமி பிளான் போடுகிறார். இதை அடுத்து பங்களாவுக்குள் திருட வந்த விஜய் சேதுபதியின் திட்டம் நிறைவேறியதா, இல்லையா? அதே நேரம் அரவிந்த்சாமியின் திட்டம் நிறைவேறியதா, இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. 

ஒரு எளிமையான கதையை வைத்துக்கொண்டு அதன்மூலம் சுவாரஸ்யமான மௌனம் படமாக இப்படத்தை கொடுக்க நினைத்த இயக்குநர் கிஷோர் பாண்டுரங்க பெலேகர் அதில் ஓரளவுக்கு வெற்றி பெற்றார் என்றே சொல்லலாம். படம் ஆரம்பித்து சிறிது நேரம் படத்துடன் ஒன்ற நமக்கு நேரம் எடுத்துக் கொண்டாலும் போகப் போக படம் நம்மை உள் இழுத்து அதன் பின் வேகம் எடுக்கும் திரைப்படம் இறுதி கட்டத்தில் விறுவிறுப்பாக நகர்ந்து முடிந்து இருக்கிறது. மும்பை போன்ற மிகப் பெரும் மெட்ரோ சிட்டியில் பெரும் பணக்காரர்களின் வாழ்வியலும் அதேசமயம் அடிமட்ட ஏழ்மையில் தவிக்கும் நபர்களின் வாழ்வியலையும் ஒருசேர காண்பித்து அதை உண்மைக்கு நெருக்கமாகவும் அதே சமயம் புரிந்து கொள்ளக்கூடிய காட்சி அமைப்புகளை சிறப்பான முறையில் உருவாக்கி அதன் மூலம் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் கிஷோர் பாண்டுரங். 

Advertisment

இன்றைய காலகட்டத்தில் மாஸ் மசாலா படங்களின் ஆதிக்கமே அதிகமாக இருக்கிறது. அதன் மத்தியில் இப்படி ஒரு மௌன படத்தைக் கொடுத்து அதையும் சற்றே த்ரில்லர் கலந்த காதல் படமாக கொடுத்து அதையும் ஓரளவு ரசிக்கும்படியான படமாகவே கொடுத்தது சற்றே ஆறுதல் அளிக்கிறது. மற்றபடி இன்றைய காலகட்டத்திற்கு இப்படியான படங்கள் அனைத்து தரப்பு மக்களையும் ரசிக்க வைக்குமா என்றால் சந்தேகமே. ஏனென்றால் கதையும் கதைக்களமும் திரைக்கதையும் அறத பழசாக இருப்பது படத்திற்கு சற்றே மைனஸ் ஆக இருக்கிறது. அதேபோல் காட்சிகளும் விறுவிறுப்பாக இல்லாமல் வேகமாகவும் இல்லாமல் நேர்த்தியாக மட்டும் நகர்வது சற்று மைனஸ் ஆக அமைந்திருக்கிறது. சினிமா ரசிகர்களுக்கும் மௌன பட ரசிகர்களுக்கும் அதே போல் அந்த காலகட்டத்தில் மௌன படம் எப்படி இருந்திருக்கும் என்ற ஒரு எக்ஸ்பீரியன்ஸை உணர்ந்து கொள்ள செல்லும் ரசிகர்களுக்கும் இந்த படம் நிச்சயம் ஏமாற்றம் அளிக்காது. மற்றபடி மற்ற ரசிகர்களுக்கு இன்னும் கூட சிறப்பாக கொடுத்து இருக்கலாம். 

மௌன படமாகவே இருந்தாலும் விஜய் சேதுபதியின் நடிப்பு மிக சிறப்பாக இருக்கிறது. எந்தெந்த கட்சிக்கு எந்த அளவு நடிப்பு தேவையோ அதை சிறப்பான முறையில் கொடுத்து அதை மக்களிடம் காட்சியை கடத்துவதில் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். இவருக்கு போட்டியாக மிகவும் பலம் வாய்ந்த நடிகராக தென்படுகிறார் நடிகர் அரவிந்த்சாமி. இவரும் தனக்கு கொடுத்த வேலையை மிகச் சிறப்பாக செய்து அந்த காட்சிகளை மெருகேற்றி சிறப்பான முறையில் நடித்து காட்சிகளின் ஆழத்தை நம்முடன் அழகாக கடத்துகிறார். இதற்கு நடுவே நாயகியாக நடித்திருக்கும் அதிதி ராவ் தன் பங்குக்கு சிறப்பான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். மற்றபடி உடனடித்து இருந்த அனைத்து கதாபாத்திரங்களுமே அவரவர் வேலையை சிறப்பாக செய்திருக்கின்றனர். குறிப்பாக அனைத்து நடிகர்களுமே இயக்குனர் சிறப்பான முறையில் வேலை வாங்கி இருப்பது படத்தில் நன்றாக தெரிகிறது. அது படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. 

ஏ ஆர் ரகுமான் இசையில் பாடல்கள் இந்த படத்திற்கு ஏன் என தோன்ற வைக்கிறது. ஒரு மௌன படத்தில் பாடல்கள் அவசியமா அதுவும் பாடல்கள் மட்டும் மௌனம் இல்லாதது இதை மௌனப் படம் பட்டியலில் இணைக்குமா என்பது சந்தேகமே. இருந்தும் பாடல்கள் சுமார் பின்னணி இசை வழக்கம் போல் ஏ ஆர் ரகுமான் பின்னி பெடலெடுத்து இருக்கிறார். எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு இசை தேவையோ அதை சிறப்பான முறையில் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். கரண் ஒளிப்பதிவில் காட்சிகள் உலக தரம். ஒவ்வொரு காட்சியும் நேர்த்தியாக படம் பிடித்து ரசிக்க வைத்திருக்கிறார். 

ஒரு மௌன படம் எடுக்க போகிறோம் என்று இயக்குநர் முடிவு செய்த உடனேயே அதற்கான கதையும் திரைக்கதையும் மிகவும் வலுவாக இருக்கும் பட்சத்தில் அந்த திரைப்படம் காலம் கடந்து வெற்றி பெற்று நிற்கும். ஆனால் இந்த படத்தில் எடுத்த விதமோ அதை செய்த விதமோ சிறப்பாக இருந்து ரசிக்க வைத்தாலும் கதையும் திரைக்கதையும் ஏனோ வலுவாக இல்லாதது சற்றே டிசப்பாய்ண்ட் செய்திருக்கிறது. மற்றபடி முயற்சிக்கு பாராட்டுக்கள். 

காந்தி டாக்ஸ் - சினிமா ரசிகர்களுக்கு!