மாரி செல்வராஜ் - துருவ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘பைசன்’ படம் கடந்த 17ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியானது. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

Advertisment

நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. மேலும் தென் தமிழகத்தில் நடக்கும் சாதிய பிரச்சனைகளையும் பேசியுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படக்குழுவினர் தியேட்டர் விசிட் அடித்து ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். இப்படம் நாளை(24.10.2025) தெலுங்கில் வெளியாகிறது. இதனிடையே இப்படம் உலகளவில் 5 நாட்களில் ரூ.35 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. 

Advertisment

இந்த நிலையில் இப்படத்திற்கு திரை பிரபலங்கள் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். ரஜினி தொலைபேசி வாயிலாக மாரி செல்வராஜுக்கும் பா.ரஞ்சித்துக்கும் பாராட்டு தெரிவித்தார். இப்போது நந்தன் பட இயக்குநர் இரா.சரவணன் தனது எக்ஸ் பக்கம் வாயிலாக பாராட்டி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நந்தன் படத்திற்குப் பிறகு இன்னொரு படத்தை இயக்கி இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறேன். இன்றுதான் ‘பைசன்’ பார்த்தேன். 

படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அந்தக் கதை மாந்தர்களில் ஒருவனாகக் கலந்துவிட்டேன். படம் முழுக்க தவிப்பும் கேள்வியுமாய் ஓடிக்கொண்டே இருக்கிற கிட்டானின் மூச்சு எனக்குள்ளும்  இரைக்கத் தொடங்கியது. இதுதான் கதை என்கிற நேர்க்கோட்டை மட்டுமே பார்த்துப் பயணிக்கிற படங்களுக்கு மத்தியில், ஒரு களத்தின் மொத்தத்தையும் காட்சிப்படுத்தி, எல்லோர் வாழ்வையும் பந்தி வைத்து, அதன் வழியே கதையைக் கொண்டு சென்ற விதத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் திகைக்க வைக்கிறார். 

Advertisment

மிகப்பெரிய போராட்டக்காரனால் மட்டுமே இத்தகைய கதைகளை எவர் மதிப்பீட்டுக்கும் பயப்படாமல் எடுக்க முடியும். முண்டித் துடித்து முன்னேறப் பாயும் மனிதர்களைச் சாதியும் அதையொட்டிய கொடுவினைகளும் எப்படியெல்லாம் கூறு போடுகின்றன என்பதைப் பொளேரெனப் போட்டு உடைத்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். இதுகாலம் வரை சாதிய வலியைச் சொன்ன படங்களுக்கும் ‘பைசன்’ ஆக்கத்திற்கும் நிறைய வேறுபாடு. முன்னேறத் துடிக்கும் சமூகத்தின் வலியைத் தராசு முள்ளாக நின்று முன்வைத்திருக்கும் விதம் அற்புதமானது. 

சமூகம் சார்ந்து படம் செய்கிறவர்கள் எந்தளவுக்கு மெனக்கெட வேண்டும் என்பதற்கும் ‘பைசன்’ நல்ல முன்னுதாரணம். பரிட்சைக்குப் போகும் கடைசி நிமிடம் வரை புத்தகம் புரட்டும் மாணவனைப் போல் ஒரு படத்தின் நூலளவு இடத்தில்கூட சமூகக் கூறுகளை நுழைத்துக் காட்டி,  “முன்னேறி மேல போங்கப்பா…” என நம் முதுகிலும் தட்டி அனுப்புகிறது ‘பைசன்’ படம். மகத்தான படைப்பு தந்த இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரித்த இயக்குநர் ரஞ்சித், உறுதுணையாக நின்ற அத்தனை உள்ளங்களும் கொண்டாடத்தக்கவர்கள். 

‘பைசன்’ பார்த்த நெகிழ்வில் தற்போது நான் இயக்கி முடித்திருக்கும் படத்தை இன்னும் ஐந்து நாட்கள் கூடுதலாக எடுக்க நினைக்கிறேன். அந்தளவுக்குப் பொறுப்பையும் போராட்டத்தையும் கற்றுக் கொடுத்திருக்கிறது ‘பைசன்’! ஒரு படம் இதைவிட வேறென்ன பண்ண வேண்டும்?” எனக் குறிப்பிட்டுள்ளார்.