பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் தீபவளியை முன்னிட்டு கடந்த 17ஆம் தேதி வெளியான படம் ‘டியூட்’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று இதுவரை ரூ.95 கோடி வசூலித்துள்ளது. இந்த நிலையில் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுனர். அந்த வகையில் இயக்குநர் கீர்த்திஸ்வரன் பேசுகையில், “எனக்கு எப்போதுமே பிரதீப் ரங்கநாதன் ரொம்ப பக்க பலமாக இருப்பார். ஷூட்டிங் பாட்டில் சில தைரியமான டயலாக்கை பார்த்தால் முதல் ஆளாக அவர் தான் பாராட்டுவார்.
படத்தின் இறுதியில், ‘உங்க ஆணவத்துக்கு கொலை பன்னுவீங்களாடா, அவ்ளோ ஆணவம் இருந்த நீங்க போய் சாவுங்கடான்னு’ ஒரு டயலாக் இருக்கும். அது முதலில் படத்தில் இல்லை. ஆனால் படப்பிடிப்பின் போது திருநெல்வேலி கவின் ஆணவக் கொலை செய்தியை பார்த்தோம். அது மனசுக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது. அது சம்பந்தமா நம்ம எதாவது சொல்லனும் என முதலில் சொன்னது பிரதீப் ரங்கநாதன் தான். அதுக்குப் பிறகுதான் அந்த டயலாக்கை நான் சேர்த்தேன்” என்றார்.