கேரளாவில் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட வழக்கு 2017 ஆம் ஆண்டு நடந்த நடிகை பாலியல் வழக்கு. அந்த ஆண்டு கேரளாவில் ஓடும் காரில் ஒரு பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடைமைக்கு ஆளாக்கப்பட்டார். அவரை மொத்தம் ஆறு பேர் கடத்தினார்கள். திருச்சூரில் இருந்து கொச்சிக்கு செல்லும் வழியில் கடத்திய அவர்கள் அந்த நடிகையை பாலியல் துன்புறுத்தல் செய்து அதை வீடியோவாக எடுத்தும் பின்பு மிரட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அந்த நடிகை கொடுத்த புகாரில் வழக்குப் பதிவு செய்த கொச்சி காவல் துறையினர், விசாரணையை தொடங்கினர். அப்போது கடத்தப்பட்டவர்களில் ஒருவரான பல்சர் சுனில் என்பவர் தாமாக முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டு கைதனார். பின்பு வழக்கின் திருப்பமாக இந்த கடத்தலின் பின்னணியின் பிரபல மலையாள நடிகர் திலீப் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. திலீப்புக்கும் அந்த நடிகைக்கும் முன் விரோதம் இருந்ததாகவும் அதன் காரணமாக அவர் சதித்திட்டம் தீட்டி இந்த பாலியல் சம்பவத்தை நிகழ்த்தியதாகவும் தகவல்கள் வெளியானது.
இதனிடையே திலீப் மீது கடத்தல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் குற்றச் சதி ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டார். இவர் உட்பட மொத்தம் 12 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். திலீப் 8வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இவரது கைது அப்போது பெரும் பரபரப்பை கிளப்பியது. ஆனால் அவர் பின்பு கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கழித்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து நடிகை சார்பில் திலீப் மீது வெளியே வந்து சாட்சியங்களை அழிக்க முயல்கிறார் உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது.
மொத்தம் 8 ஆண்டுகளாக இந்த பாலியல் வழக்கு பல கட்டங்களாக நடைபெற்று வந்த நிலையில் இதுவரை மொத்தம் 251 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் எர்ணாகுளம் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஏ1 முத ஏ6 வரை மொத்தம் ஆறு பேர் குற்றவாளி எனவும் எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட திலீப் நிரபராதி எனவும் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. திலீப் மீது சுமத்தப்பட்ட குற்றங்களில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரை விடுதலை செய்வதாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஹனி வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
Follow Us