கேரளாவில் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட வழக்கு 2017 ஆம் ஆண்டு நடந்த நடிகை பாலியல் வழக்கு. அந்த ஆண்டு கேரளாவில் ஓடும் காரில் ஒரு பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அவரை மொத்தம் ஆறு பேர் கடத்தினார்கள். திருச்சூரில் இருந்து கொச்சிக்கு செல்லும் வழியில் கடத்திய அவர்கள் அந்த நடிகையை பாலியல் துன்புறுத்தல் செய்து அதை வீடியோவாக எடுத்தும் பின்பு மிரட்டியுள்ளனர். 

Advertisment

இந்த சம்பவம் தொடர்பாக அந்த நடிகை கொடுத்த புகாரில் வழக்குப் பதிவு செய்த கொச்சி காவல் துறையினர், விசாரணையை தொடங்கினர். அப்போது கடத்தப்பட்டவர்களில் ஒருவரான பல்சர் சுனில் என்பவர் தாமாக முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டு கைதனார். பின்பு வழக்கின் திருப்பமாக இந்த கடத்தலின் பின்னணியில் பிரபல மலையாள நடிகர் திலீப் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. திலீப்புக்கும் அந்த நடிகைக்கும் முன் விரோதம் இருந்ததாகவும் அதன் காரணமாக அவர் சதித்திட்டம் தீட்டி இந்த பாலியல் சம்பவத்தை நிகழ்த்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. 

Advertisment

இதனிடையே திலீப் மீது கடத்தல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் குற்றச் சதி ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டாது. இவர் உட்பட மொத்தம் 12 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். திலீப் 8வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இவரது கைது அப்போது பெரும் பரபரப்பை கிளப்பியது. ஆனால் அவர் பின்பு கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கழித்து ஜாமீனில் வெளியே வந்தார். இதையடுத்து இந்த வழக்கு தொடர்ந்து நடந்து கொண்டே வந்தது. மொத்தம் 8 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் இன்று எர்ணாகுளம் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஏ1 முத ஏ6 வரை மொத்தம் ஆறு பேர் குற்றவாளி எனவும் எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட திலீப் நிரபராதி எனவும் தீர்ப்பு வழங்கியது. திலீப் மீது சுமத்தப்பட்ட குற்றங்களில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரை விடுதலை செய்வதாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஹனி வர்கீஸ் தெரிவித்தார். 

இதையடுத்து நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த திலீப் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில், “ஒன்பது ஆண்டுகளாக எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. இந்த வழக்கில் சதி இருப்பதாக முதலில் கூறியது மஞ்சு வாரியர் தான். அதன் பிறகு தான் எனக்கு எதிராக சதி தொடங்கப்பட்டது. காவல்துறையினர் முதல் குற்றவாளி பல்சர் மற்றும் அவர்களது சிறை தோழர்களுடன் சேர்ந்து எனக்கு எதிராக ஒரு போலி கதையை உருவாக்கினார்கள். மேலும் அதை சில ஊடகங்களுடன் சேர்ந்து சமூக ஊடகங்களில் பரப்பினர். ஆனால் அந்த போலி கதை நீதிமன்றத்தில் தோல்வியடைந்தது. உண்மையான சதி என்னவென்றால் அது எனக்கு எதிராக திரட்டப்பட்ட சதிதான். இந்த ஒன்பது ஆண்டுகளில் சமூகத்தில் இருக்கும் என்னுடைய நன்மதிப்பையும் வாழ்க்கையையும் நொறுக்கி விட்டனர்” என்றார். மஞ்சு வாரியர் திலீப்பின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisment