பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் போட்டியில் கபடி விளையாட்டில் இந்திய மகளிர் அணி இறுதி போட்டியில் ஈரானிய அணியை 75 - 21 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. இதில் சென்னை கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகாவிற்கு முக்கிய பங்கு இருக்கிறது. இதனால் கார்த்திகாவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இதனிடையே திரைப் பிரபலங்கள் பா.ரஞ்சித், கோபி நயினார், ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட பலரும் பாராட்டுத் தெரிவித்தனர். சமீபத்தில் பைசன் படக்குழு சார்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் கார்த்திகாவிற்கு நேரில் வாழ்த்து தெரிவித்து கார்த்திகாவிற் ரூ.5 லட்சமும், அவர்களது கண்ணகி நகர் கபடி குழுவிற்கு ரூ.5 லட்சமும் ஊக்கத்தொகையாக கொடுத்தார். பைசன் படமும் அர்ஜுனா விருது வென்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை கதையை மூலதனமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த நிலையில் பட ஹீரோ துருவ் விக்ரமையும் கார்த்திகாவையும் ஒப்பிட்டு பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் துருவ் விக்ரம் கார்த்திகா மற்றும் அவரது கபடி குழு பயிற்சியாளர் ஆகியோரை நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்து பரிசு கொடுத்தார். இது தொடர்பான வீடியோவைஅவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட துருவ் விக்ரம், “ஒரு உண்மையான ஹீரோ. இந்த தருணத்தின் உண்மையான பைசன். வாழ்த்துக்கள் கார்த்திகா. நீங்கள் எனக்கும் மில்லியன் கணக்கான மக்களுக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us