பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, சமயல் கலைஞர் மற்றும் நடிகரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக மகளில் ஆணையரகத்தில் புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜிடம் விசாரணை நடந்து வந்தது. இரு தரப்பினரும் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். அனைத்தும் நிலுவையில் இருக்கிறது. இதனிடையே ஜாய் கிரிசில்டாவிற்கு குழந்தை பிறந்தது.
இதனிடையே ஜாய் கிரிசில்டா தனது சமூக வலைதளப்பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜுடன் இருக்கும் வீடியோக்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டு அவரை குற்றம் சாட்டி வந்தார். அப்போது மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தையும் டேக் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தங்களது நிறுவனத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டதாக மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது இருவருக்கும் மத்தியஸ்தம் செய்ய ஓய்வு பெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி ஒருவரை நியமித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது தனது குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் என்பதை நிரூபிக்க மரபணு சோதனை நடத்தப்பட வேண்டும் என ஜாய் கிரிசில்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதே போல் இந்த மரபணு சோதனைக்கு தான் தயாராக இருப்பதாகவும் மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கானது இன்று நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இருவரது தரப்பிலும் மரபணு சோதனைக்கு அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை பெற்றுக் கொண்ட நீதிபதி மாதம்பட்டி ரங்கராஜுக்கு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பரிசோதனை நடத்த உத்தரவிட்டுள்ளார். இந்த சோதனையை முடித்து அந்த அறிக்கையை மத்தியஸ்தராக நியமிக்கப்பட்ட நீதிபதியிடம் சமர்பிக்க வேண்டும் என ஒரு வழக்கறிஞர் ஆணையரை உருவாக்கியுள்ளார். பின்பு வழக்கு விசாரணையை மார்ச் 30ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
Follow Us