இந்தியத் திரைத்துறையில் மிக முக்கிய ஆளுமையாக திகழும் ரஜினிகாந்த், தனது 50வது ஆண்டுகாலத் திரைபயணத்தை நிறைவு செய்யவுள்ளார். இவர் நடித்த முதல் படமான ‘அபூர்வ ராகங்கள்’ வரும் 15ஆம் தேதியுடன் 50 ஆண்டுகளை கடக்கிறது. இன்று வரை தனது ஸ்டைலான நடிப்பாலும், எனர்ஜியுடன் தோன்றும் வசீகரத்தாலும், பஞ்ச் வசனங்களாலும் தொடர்ந்து ரசிகர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருக்கும் அவர், தற்போது கூலி படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் நாளை(14.08.2025) திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறையில் 50 ஆண்டுகளைக் கடந்துள்ளதற்கு பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள 'எக்ஸ்' வலைத்தள பதிவில் 'நாளை வெளியாகும் அவருடைய ‘கூலி’ திரைப்படத்தைப் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அனைத்துத் தரப்பையும் ஈர்க்கிற Mass Enterntainer-ஆக #Coolie திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது.
‘கூலி’ மாபெரும் வெற்றி பெற ரஜினிகாந்த் சார், சன்பிக்சர், சத்யராஜ் சார், லோகேஷ் கனகராஜ், அமீர்கான் சார், அனிருத், ஸ்ருதிஹாசன் உட்பட படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.