தமிழ் திரையுலகை மட்டுமில்லாமல், ஒட்டு மொத்த இந்தியத் திரையுலகையும் இசையால் தன் வசப்படுத்தியவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவரது இசை உலக அளவில் பெரும் பாராட்டுகளை பெற்றுள்ளது. அதனால் தான் உலக அளவில் திரையுலகில் பெரும் மதிப்பு மிக்க விருதாக பார்க்கப்படும் ஆஸ்கர் விருதினை பெற்றுள்ளார். உலகம் முழுவதும் உள்ள பல திரைக்கலைஞர்களுக்கும் இந்த விருது கனவாகவே இருந்து வரும் நிலையில், இவர் ஒன்றல்ல இரண்டு விருதுகளை சாதாரணமாகவே வென்றுவிட்டார். அவ்வளவு திறமை கொண்ட இசைக்கலைஞராக இருந்து வருபவர் ரஹ்மான்.
இந்த நிலையில் இன்று (ஜனவரி 06) தனது 59 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "இசையால் எல்லைகளைக் கடந்து, எட்டுத்திக்கும் ஆளும் அன்பு இளவல் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள், உங்களது இசையைப் போலவே நீங்களும் என்றும் இளமையோடும் துள்ளலோடும் திகழ்ந்து, தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்திட விழைகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த ஞாயிறு அன்று "மூன்வாக்" படத்தின் இசை வெளியீட்டு விழாவில், படக்குழுவின் சார்பாக இவருக்கு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் பிரமாண்ட கேக் வெட்டி, படக்குழுவினருடன் மகிழ்ச்சியாக பிறந்த நாள் கொண்டாடியப் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Follow Us