yuvan shankar raja dark dravidian post goes viral

'மோடியும் அம்பேத்கரும்'என்ற தலைப்பில் வெளியாகியுள்ள புத்தகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா ""மேக் இன் இந்தியா" திட்டம் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. நாட்டில் சாலைகள், ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில், விரைவு எக்ஸ்பிரஸ் சாலைகள் போன்றவை உலகத் தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சமூக நீதியைப் பொறுத்தவரை, பல்வேறு சட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி இருக்கிறார். முத்தலாக் சட்டம், 'பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் - பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்' என்ற திட்டமும், பெண்களின் திருமண வயதை உயர்த்த முடிவெடுத்ததும் பெண் சமுதாயத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும். இதுபோன்ற நரேந்திர மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளைக் கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார். அம்பேத்கரும், நரேந்திர மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

இளையராஜாவின் இந்த முன்னுரை தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிடுவது தவறானது என்று கூறி சமூக வலைத்தளங்களில் இளையராஜாவின் கருத்துக்கு பலரும் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் பதிவிட்டு வருகின்றனர். இதே போன்ற இளையராஜாவின் கருத்திற்கு ஆதரவாக பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா உள்ளிட்ட சில தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா, "கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன்" என்று அவரது புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இளையராஜாவின் சர்ச்சைக்குரிய கருத்திற்குஇடையில் யுவன் சங்கர் ராஜாவின் இந்த பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.