
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய பெப்சி தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவரும் திரைப்பட இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி, "நம்மகிட்ட இருக்கிறதுல மிக உயர்வானது சுதந்திரம். அது இருக்கும் போது அதோட அருமை தெரியாது. இல்லனா தான் அருமை தெரியும். ஆயிரம் வருடம் ஆனா கூட மகாத்மா காந்திய யாரும் மறக்க மாட்டாங்க. திருப்பூர் குமாரனை யாரும் மறக்க மாட்டாங்க. சரித்திரம் படைப்பதற்கு என்ன வேண்டுமென்றால் சமூகத்திற்கான போராட்டம் வேண்டும்.
திருப்பூர் குமரனின் வீட்டுக்கு போனோம். திருப்பூர் குமரன் வாழ்ந்த வீடு 10-க்கு 10-தான் இருக்கும். 10-க்கு 10 வாழ்ந்த வீட்ல இருந்து, இன்னைக்கு ஏறக்குறைய 100 ஆண்டுகள் கழிச்ச பிறகும் கூட, அந்த இடத்தைத் தேடி எல்லாரையும் அங்கு வர வைக்கிறது தான் சரித்திரம் படைத்த மனிதனுடைய சாதனை. அப்ப சாதனை படைக்க 10 ஏக்கர் வீடு இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. 10-க்கு 10 வீடு இருந்தா கூட போதும். அந்த சாதனையைப் படைக்க நம்மால் முடியும் என்று மாணவர்கள், குழந்தைகள் தெரிஞ்சிக்கணும்.
நமது உழைப்பு நமக்கானதாகவும் நமது சமூகத்திற்கானதாகவும் இருக்கும் வரை நமது பெயர் சரித்திரத்தில் ஏறிட்டே இருக்கும்" எனத் தெரிவித்தார்.