Skip to main content

திடீரென கல்யாண வயசு வந்த கதை! - யோகி பாபு தந்த மோட்டிவேஷன் 

Published on 05/02/2020 | Edited on 05/02/2020

‘எனக்கு கல்யாண வயசுதான் வந்துடுச்சுடீ’ என்று நயன்தாராவை பார்த்து யோகி பாபு பாடும் பாடல், முரட்டு சிங்கிள்ஸ் 'எங்களுக்கு வயதாகிவிட்டது சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைங்க' என்று வீட்டில் பேச ஒரு ஆயுதமாகப் பயன்பட்டது. தமிழ் சினிமாவில் ஒவ்வொரு டீக்கேடுக்கும் ஒரு நடிகர் முன்னணி காமெடி நடிகராக வலம் வருவார். அந்த வகையில் இந்த 2K கிட்ஸ் டீக்கேடின் முன்னணி காமெடி நடிகர், நாயகராக இருப்பவர் யோகி பாபு.
 

yogi babu

 

 

தற்போதைய சூழலில் யோகி பாபு நடித்த படங்கள் என்று லிஸ்ட் போடுவதை விட நடிக்காத படங்கள் என்று லிஸ்ட் போட்டால்தான் சின்ன லிஸ்ட்டாக வரும். லோ பட்ஜெட்டில் தொடங்கி, ஹை பட்ஜெட் வரை... தளபதி, தல, சூப்பர் ஸ்டார் என்று உச்ச நட்சத்திரங்கள் படங்கள் என்று அனைத்திலுமே தவிர்க்க முடியாதவராக தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒருவர் யோகிபாபு. கடைசியாக வெளிவந்த 'தர்பார்' படத்தில் சூப்பர் ஸ்டாரையே இவர் கலாய்த்தது எல்லாம் நம்மை கோபப்படுத்தாமல் ரசிக்க வைத்தது. 2009 இல் 'யோகி' படத்தில் அறிமுகமான பாபு 'யோகி' பாபுவானார். 2012இல் வெளிவந்த சுந்தர்.சியின் 'கலகலப்பு' படத்தில் கவனிக்கப்பட்டார். அதன் பிறகு இவர் அடைந்த வளர்ச்சி அபரிமிதமானது, பல அவமானங்களை தாண்டி வந்தது. முதலில் கிண்டல் செய்யப்பட்ட இவரது தோற்றமே இன்று இவரது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

காமெடி நடிகராக மட்டுமல்லாமல் அவர் நாயகனாக நடித்து கூர்கா, தர்மபிரபு, ஜோம்பி உள்ளிட்ட பல படங்கள் வெளியாகியுள்ளன, இன்னும் லிஸ்ட்டில் பல படங்கள் வெயிட்டிங்கில் இருக்கின்றன. இப்படி பிஸியானவராக இருந்த யோகிபாபு தமிழ் சினிமாவின் மோஸ்ட் எலிஜிபல் சிங்கிளாக இருந்து வந்தார் (தற்போது இல்லை). 'பிகில்' பட ஆடியோ லான்ச்சில் விஜய் யோகி பாபுவின் திருமணம் குறித்து பேசினார். அப்போது யோகி பாபு வெட்கப்பட்டதை தமிழகமே ரசித்தது. 'தர்பார்' ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் வர்ற ‘தை’ மாதத்திற்குள் அவருக்கு திருமணம் நடைபெற்றுவிடும் என்று கூறினார். இப்படி பிரபலங்கள் மத்தியிலும் அவருடைய திருமண பேச்சு அதிகம் இருந்தது.
 

yogi babu

 

 

அவ்வப்போது திடீர் திடீரென சமூக வலைதளங்களில் 'யோகிபாபுவுக்கும் இவருக்கும் திருமணம் நடைபெற போகிறது' என்று வதந்திகள் பரவின. ஒரு முறை அதற்கு யோகி பாபு வீடியோ வெளியிட்டு மறுப்பு தெரிவித்து வந்தார். இவ்வளவு ஏன், யோகி பாபுவுக்கும் நடிகை ஒருவருக்கும் இன்று திருமணம் நடைபெற போவதாக சமூக வலைதளத்தில் பரவ, அதற்கும் யோகிபாபு மறுப்பு தெரிவித்தார் என்றும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் யோகி பாபு அனைவருக்கும் சர்ப்ரைஸ் தரும் விதமாக தனக்கும் மஞ்சுபார்கவி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுவிட்டதாக ட்விட்டரில் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார். குல தெய்வம் கோவிலில் நடத்த திட்டமிட்டிருந்ததால், விசயம் வெளியில் தெரிந்தால் ரசிகர்கள், ஊடகங்கள் கூடி விடுவார்கள் என்று அறிவிக்காமல் அமைதியாக நடத்தியிருக்கிறார்கள். இந்தத் திருமணத்தில் குடும்பத்தினர் மட்டும் கலந்துகொண்டுள்ளனர். சென்னையில் விரைவில் மிக பிரம்மாண்டமான ஒரு வரவேற்பை நடத்த யோகிபாபு திட்டமிட்டுள்ளார் எனவும் அதில் பிரபலங்கள், ஊடகங்களுக்கு அழைப்பு இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. எப்படியோ கல்யாண வயசு வந்த யோகிபாபுவுக்கு கல்யாணம் நடந்துவிட்டது. சாதாரண பின்னணியில் இருந்து வந்து, இன்று தன் திருமணத்தை தமிழகத்தில் செய்தியாகப் பேச வைத்திருக்கும் யோகி பாபு உண்மையில் இளைஞர்களுக்கு ஒரு மோட்டிவேஷன்தான்.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Next Story

திருமணத்தின் போது மணமகனின் அநாகரிக செயல்; அதிரடி முடிவு எடுத்த மணப்பெண்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
The bride who broke off the wedding in kerala

கேரளா மாநிலம், பத்தனதிட்டம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 32 வயது வாலிபர். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேலும், இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருமண நாள் அன்று, மணமகன் மது குடித்துவிட்டு போதையில் மணமேடைக்கு வந்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட, மணப்பெண் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மது போதையில் இருந்த மணமகன், பாதிரியாரிடமும், மணபெண்ணின் உறவினர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனைக் கண்டு கோபமடைந்த மணப்பெண், திருமணம் வேண்டாம் என்று அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனால், அவர்களது திருமணம் பாதியில் நின்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மணப்பெண் குடும்பத்தினர், ‘தங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், திருமணத்திற்கு பெரும் தொகை செலவு செய்ததால், அந்த தொகையை நஷ்ட ஈடாக திரும்ப தர வேண்டும். இல்லையென்றால், மணமகன் மீதும், அவரது உறவினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு, மணப்பெண் குடும்பத்தினர் செலவு செய்த தொகையான 6 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக திரும்ப கொடுக்க மணமகனின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, அனைவரும், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே, மது போதையில் அனைவரிடமும் தகராறு செய்ததற்காக மணமகனின் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.