Skip to main content

பிரதமர் மோடியை சந்தித்த யஷ், ரிஷப் ஷெட்டி

Published on 13/02/2023 | Edited on 13/02/2023

 

Yash, Rishabh Shetty met PM Modi

 

கன்னட திரையுலகில் 'கே.ஜி.எஃப்' மற்றும் 'காந்தாரா' உள்ளிட்ட படங்கள் இந்தியா முழுவதும் கவனம் பெற்றது. அந்த படத்தின் மூலம் பிரபலமான யஷ் மற்றும் ரிஷப் ஷெட்டி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசியுள்ளனர். மேலும் மறைந்த புனீத் ராஜ்குமாரின் மனைவி அஷ்வினி, தயாரிப்பாளர் விஜய் கிர்கந்தூர் உடன் இருந்தனர்.

 

பெங்களூர் ராஜ்பவனில் நடைபெற்ற இந்த சந்திப்பில் சினிமா, கர்நாடகாவின் கலாச்சாரம், பண்பாடு குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. அதோடு கிரிக்கெட் வீரர்கள் அனில் கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத், மணீஷ் பாண்டே, மயங்க் அகர்வால் உள்ளிட்டோர் மோடியை சந்தித்துள்ளனர். 

 

யஷ்,  'கே.ஜி.எஃப் 2' படத்தை தொடர்ந்து நார்தன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாகச் சொல்லப்படுகிறது.  ரிஷப் ஷெட்டி காந்தாரா பட வெற்றிக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகத்தின் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குழந்தை விவகாரம் - நடிகை கைது!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
sonu srinivas.gowda child issue

பெங்களூரைச் சேர்ந்தவர் கன்னட நடிகை சோனு ஸ்ரீநிவாஸ் கௌடா. கன்னட பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டதன் மூலமும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டும் பிரபலமானவராக இருந்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோ வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் அவர், அவ்வப்போது ஒரு பெண் குழந்தையுடன் இருக்கும்படியும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வந்தார். அந்த குழந்தையை அவர் தத்தெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் அக்குழந்தையை சட்ட விரோதமாக சோனு ஸ்ரீனிவாஸ் கௌடா தத்தெடுத்துள்ளதாக குழந்தைகள் நலத்துறை சார்பில் காவல் துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்குழந்தையின் அடையாளத்தை நடிகை வெளிப்படுத்தியதாகவும், மார்ச் மாதம் தேர்வு இருந்தும் குழந்தையை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்ததாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு குழந்தை தத்தெடுக்கும் நடைமுறையில், குழந்தைக்கும் தத்தெடுப்பவருக்கும் 25 வயது இடைவெளி இருக்க வேண்டும் என சட்டம் இருக்கும் நிலையில் அக்குழத்தைக்கு 8 வயது என்றும் நடிகைக்கு 29 என்றும் மனுவில் மேற்கோள்காட்டப்பட்டுள்ளது.  

இந்த புகாரின் அடிப்படையில் நடிகையை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவரை விசாரித்த போது, குழந்தை தத்தெடுக்கும் முறையை முழுமையாக பின்பற்றவில்லை என்று ஒப்புகொண்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. பின்பு நடிகையை 4 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது. 

Next Story

“மன்னிப்பு கேட்கவில்லையென்றால் போராட்டம் நடத்துவோம்” - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய தர்ஷன்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
kannada actor dharshan women organization issue

கன்னடத் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் தர்ஷன். தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அந்த வகையில் தற்போது புதிதாக ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமீபத்தில் கர்நாடகா ஸ்ரீரங்கப்பட்டணாவில் நடந்த நிகழ்ச்சியில், பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளால் தர்ஷன் பேசியுள்ளதாக கவுடாதியர சேனே என்ற பெண்கள் அமைப்பைச் சேர்ந்த சிலர், மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த நிகழ்ச்சியில் தர்ஷன், அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் காதலி என சொல்லப்படும் பவித்ரா கவுடா தொடர்பாக சமூக வலைத்தளங்களில் சிலர் பேசி வந்த நிலையில், அதற்கும் விளக்கமளிக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

இதனிடையே அந்த புகார் மனுவில் கவுடாதியர சேனே அமைப்பு குறிப்பிட்டிருப்பதாவது, “தர்ஷன் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். திரையில் எந்தளவிற்கு நல்லவராக இருக்கிறாரோ அதையே நடைமுறைப்படுத்த வேண்டும். ரசிகர்களிடம் பகிரங்கமாக பேசும்போது இதுபோன்ற வார்த்தைகளை ஏன் பயன்படுத்தினார். அதற்கு அவர் விளக்கமளிக்க வேண்டும். மேலும் அந்த வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவருக்கும் அவர் மனைவிக்கும் இடையே கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பது எங்களுக்கும் தெரியும். நடிகர் தனது தவறை அறிந்து மன்னிப்பு கேட்க வேண்டும். ஆனால், அவர் அதை இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால்தான் நாங்கள் மகளிர் ஆணையத்தை அணுக முடிவு செய்தோம். இதை அவர் ஏற்கவில்லை என்றால் அவரது வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.