Skip to main content

"உங்க வேலையை மட்டும் பாருங்க" - ‘ஜெய் பீம்’ சர்ச்சை குறித்து எழுத்தாளர் சுரா பேச்சு!

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

writer sura

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், சமீபத்திய ‘ஜெய் பீம்’ சர்ச்சை குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

“அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம், மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. உலகம் முழுவதுமுள்ள மாறுபட்ட திரைப்படங்களை விரும்பி பார்ப்பவர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கடந்த சில மாதங்களில் வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிகம் பேசப்பட்ட திரைப்படமாக ‘ஜெய் பீம்’ திரைப்படம் உள்ளது. திரையரங்கில் வெளியாகியிருந்தால் இதைவிட பெரிய பெயரையும் புகழையும் இப்படம் பெற்றிருக்கும். நடிகராகவும் தயாரிப்பாளராகவும் சூர்யாவின் கலையுலக பயணத்தில் மிக முக்கியமான படம் ‘ஜெய் பீம்’. சூர்யாவின் வேறு எந்த படமும் பத்திரிகை மற்றும் ஊடகங்களால் இந்த அளவிற்கு கொண்டாடப்படவில்லை. இந்தப் படத்தில் ஒரு காட்சியில் தொங்கிய காலண்டரில் அக்னி கலசம் இருக்கிறது எனக் கூறி பாட்டாளி மக்கள் கட்சியும், அன்புமணி ராமதாசும் சலசலப்பை ஏற்படுத்தி மிகப்பெரும் பரபரப்பை உண்டாக்கினர். அந்தக் காலண்டரை நீக்கிய பிறகும் இந்த சர்ச்சை தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், கடந்த ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தை நான் நினைத்துப் பார்க்கிறேன்.

 

கடந்த ஆண்டு கரோனா லாக்டவுன் காலத்தில் மலையாளத்தில் ‘ட்ரான்ஸ்’ என்றொரு படம் வெளியானது. அந்தப் படத்தில் நாயகனாக ஃபகத் பாசிலும் நாயகியாக நஸ்ரியாவும் நடித்திருந்தனர். அன்வர் ரஷீத் படத்தை தயாரித்து இயக்கியிருந்தார். கன்னியாகுமரியில் இருக்கும் ஃபகத் பாசிலை கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக கார்ப்பரேட் அளவிற்கு சிந்தித்து சிலர் பயன்படுத்துவார்கள். விஜூ பிரசாத் என்ற பெயரை ஜோஷ்வா என மாற்றி எப்படி அவர் பேச வேண்டும் என்று பயிற்சி கொடுப்பார்கள். எல்லா மதங்களும் மதத்தைப் பரப்பும் வேலையை செய்துகொண்டுதான் இருக்கின்றன. கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப தன்னைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை ஒருகட்டத்தில் உணர்ந்துகொண்ட ஃபகத் பாசில், அவர்களை ஒரு டிவி சேனல் மூலம் அம்பலப்படுத்துவார். இந்தப் படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை ஃபகத் பாசில் வெளிப்படுத்தியிருப்பார். 

 

ad

 

கேரளாவில் மூன்றில் ஒரு பங்கு கிறிஸ்தவர்கள் உள்ளனர். ஆனால், அவர்கள் யாரும் இந்தப் படத்தை எதிர்க்கவில்லை. கிறிஸ்தவ மதத்தைப் பரப்புகிறார்கள், அலங்கார வார்த்தைகளைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றெல்லம் எப்படி நீங்கள் காட்சி வைக்கலாம் என்று எந்தக் கிறிஸ்தவரும் போர்க்கொடி தூக்கவில்லை. அந்தப் படத்தின் இயக்குநர், நடிகர் மற்றும் நடிகை இஸ்லாமியராக இருந்தபோதிலும் அவர்கள் அதைப் பொருட்டாக மதிக்கவில்லை. அந்த மக்கள் கலை படைப்பைக் கலை படைப்பாக மட்டுமே பார்க்கிறார்கள். ஒரு படத்தை தடை செய்ய வேண்டும், படத்தில் உள்ள காட்சிகளை நீக்க வேண்டும், படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று இதுவரை எந்த சம்பவமும் கேரளாவில் நடந்ததேயில்லை. கேரளாவில் உள்ள மக்கள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் அனைவரும் கலை படைப்பைக் கலை படைப்பாக மட்டுமே பார்க்கின்றனர். அப்படிப்பட்ட அறிவு முதிர்ச்சி நம் தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகளுக்கு ஏன் இல்லை. சினிமாவை சினிமாவாக மட்டும் பாருங்கள். அதைவிடுத்து, மைக்ரோஸ்கோப்பை வைத்து காலண்டரில் உள்ள படம், படத்தின் பெயர் என பார்த்துக்கொண்டிருந்தால் எந்தக் காலண்டரையும் தொங்கவிட முடியாது. கதாநாயகன் மற்றும் கதாநாயகிக்குப் பெயர் வைக்கவே முடியாது. எந்தக் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். காலத்திற்கு ஏற்றவாறு நீங்கள் மாற வேண்டாமா? கலை படைப்பை சிதைக்காதீர்கள். கலைஞர்களின் மனதைப் புண்படுத்தாதீர்கள். கலை கலையாக இருக்கட்டும். உங்களுடைய வேலை என்பது மற்றொரு துறை. மக்களுக்கு நல்லது செய்வதற்கு அந்தத் துறையைக் கவனியுங்கள். மக்களுக்கு நல்லது செய்வதற்குத்தானே உங்களுக்குப் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் வேலையை மட்டும் பாருங்கள். மற்றவர்கள் வேலையில் தலையிடாதீர்கள். கேரளாவில் மக்கள் எப்படி பக்குவப்பட்டவர்களாக இருக்கிறார்களோ அதேபோல நீங்களும் இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சிவாஜி பேச மறுத்த வசனம்; அவருக்காக இவர் தான் பேசினார்” - எழுத்தாளர் சுரா பகிர்ந்த சுவாரசியம்  

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

sura

 

நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலுக்கு எழுத்தாளர் சுரா அவர்கள் ஞான ஒளி திரைப்படத்தின் ஒரு பாடல் பற்றி பகிர்ந்து கொண்ட சுவாரசியமான தகவல்கள் பின்வருமாறு…

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து நூறு நாட்கள் ஓடிய திரைப்படம் ஞான ஒளி. இத்திரைப்படத்தின்  கதை, வசனம் எழுதியவர்  வியட்நாம் வீடு சுந்தரம். இவர் சிவாஜி நாடக மன்றத்துக்கு வியட்நாம் வீடு  என்ற நாடகத்தை எழுதினார். நாடகத்தின் நாயகனாக சிவாஜி கணேசன் நடித்தார். நாடகத்தின் புகழ் காரணமாக, இதே கதையை சிவாஜி பிலிம்ஸ் திரைப்படமாக தயாரித்தது. பி.மாதவன் வியட்நாம் வீடு என்ற படத்தை இயக்கினார். இதுவும் நூறு நாட்கள் ஓடியது. பின்பு அதன் புகழ் காரணமாக கதை ஆசிரியர் சுந்தரம், வியட்நாம் வீடு சுந்தரம் என அழைக்கப்பட்டார். அதன் பிறகு, சிவாஜி கணேசனை வைத்து கௌரவம் என்ற படத்தை வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கினார். கதை ஆசிரியராக இருந்த வியட்நாம் வீடு சுந்தரம் இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநர் ஆனார்.  இந்தப் படமும்  நூறு நாட்கள் ஓடியது. 

 

இந்தத் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் வக்கீலாகவே வாழ்ந்து மிகவும் சிறப்பாக நடித்தார். அதன் பிறகு, கர்ணன் என்ற கதாபாத்திரம் மூலமும், சுந்தரம் என்ற கதாபாத்திரம் மூலமும் காலம் கடந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

 

இதே மாதிரி  ஞான ஒளி என்ற நாடகத்திற்கு வியட்நாம் சுந்தரம் கதை எழுதினார். நாடகத்தின் வெற்றி, அதன் புகழ் காரணமாக திரைப்படமாக ஜெ.ஆர்.மூவிஸ் என்ற நிறுவனம் தயாரித்தது. சிவாஜி கணேசன் உடன் இணைந்து மேஜர் சுந்தர்ராஜன் நடித்தார். இதுவும் நூறு நாட்கள் ஓடியது. பி.மாதவன் என்பவர் இயக்கினார். சிவாஜி கணேசன் நடித்த மிகச்சிறந்த திரைப்படங்களில் ஞான ஒளியும் ஒன்று. ஞான ஒளி திரைப்படத்தை இப்போது உள்ள தலைமுறையினர் பார்த்தால் கூட ஒரு மிகச்சிறந்த திரைப்படம் என்பதை உணரலாம். சிவாஜி கணேசன் எந்த அளவுக்கு ஆழமாக நடித்து முத்திரை பதித்து உள்ளார் என்பதை உணரலாம். ஆண்டனி என்ற கிறிஸ்தவ கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருப்பார் என்பதையும் அறியலாம். 

 

ஞான ஒளி திரைப்படத்தில் வரும், 'தேவனே என்னை பாருங்கள்' என்ற பாடல் இன்றளவும் மிகவும் பிரபலமாக வானொலி, மேடைகள், கலை நிகழ்ச்சிகளில் ஒலித்துக் கொண்டுள்ளது. இந்தப் பாடலின் நடுவில் வரும் வசனமான ‘ஓ  மை  லார்ட் பார்டன்  மீ,  இந்த மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் இரு வேறு பாதையில் போய் விட்டன’ என்ற வசனத்தை சிவாஜி உச்சரிக்க மறுத்து விட்டார். பின்பு அவரது உதவியாளர் ஜோசப்  கிருஷ்ணன் என்ற ஆங்கிலோ இந்தியரை வைத்து பாட வைக்க முடிவு செய்தனர். பின்பு தவிர்த்து விட்டனர். அதன் பிறகு, சதன் என்ற மிமிக்ரி கலைஞர் அவர்கள் மூலம் பாட வைக்கலாம் என முடிவு செய்தனர். ஆனால் அதுவும் ஒர்க்கவுட் ஆகவில்லை. 

 

பின்பு பாடல் மற்றும் வசனம் என இரண்டையும் டி.எம். செளந்தராஜன் அவர்களே பாடவும் முடிவு செய்தார்கள். இருந்தாலும் சிவாஜி எப்படி உச்சரிப்பாரோ அது போன்று உச்சரிக்க வேண்டும் என்று சிவாஜியை உச்சரிக்கச் சொல்லி, அதை காதில் வாங்கி, சிவாஜி எப்படி உச்சரிப்பாரோ அதே போன்று டி.எம்.சௌந்தரராஜன் பாடினார். சிவாஜி கணேசன் எந்த அளவிற்கு உணர்ச்சிவசப்பட்டு நடிப்பாரோ அந்த அளவிற்கு உச்சரித்தார் டி.எம்.எஸ்.  ஐம்பது சதவீதம் சிவாஜி கணேசன் அளவுக்கு உச்சரித்தார். அதனால் தான்  இரண்டு மாமன்னர்களும் காலங்கடந்து சென்றாலும், மக்கள் மனதில் பசுமையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

 


 

Next Story

"நிராகரித்தவர்கள் மத்தியில் தன்னை நிரூபித்தவர் விஜய் சேதுபதி" - எழுத்தாளர் சுரா பகிர்ந்த சுவாரசிய தகவல்

Published on 29/09/2022 | Edited on 29/09/2022

 

writer sura about talk vijay sethupathi

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில், நடிகர் விஜய் சேதுபதி குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு....

 

"சாதாரண நிலையில் இருந்து ஒரு உயர்ந்த இடத்திற்கு வந்துள்ள விஜய் சேதுபதியை நீங்கள் ரோல் மாடலாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர் தனது வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளை சந்தித்துள்ளார். தனது சொந்த ஊரான ராஜபாளையத்தில் இருந்து சினிமாவில் பெரிய ஆளாக்கிடனும்னு சென்னைக்கு வருகிறார். அந்த மாதிரி நேரடியா எடுத்த உடனே சினிமாவில் பெரிய ஆளாக்கி முடியாது என்பதை  உணர்ந்த விஜய் சேதுபதி ஒரு சிறிய சிமெண்ட் கம்பெனியில் அக்கவுண்டன்ட்டா வேலைக்கு சேர்ந்து பணி செய்துகொண்டு வருகிறார். அதன்பிறகு  செல்போன் கடை, பாஸ்ட்புட், சேல்ஸ்மேன் என கிடைக்கிற வேலை எல்லாம் செய்து வருகிறார். 

 

அந்த சமயத்தில் ஒரு நாள் விஜய் சேதுபதிக்கு துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் அக்கவுண்டன்ட்டாக நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கிறது. தொடர்ந்து 4 ஆண்டுகள் துபாயில் வேலை பார்த்தார். இதனிடையே ஆன்லைன் மூலம் ஜெஸி என்ற பெண்ணுடன் அறிமுகமாகி அவரையே திருமணமும் செய்துகொண்டார். ஒரு கட்டத்தில் துபாய் வேலையும் அவருக்கு பிடிக்காமல் போக, மீண்டும் சென்னைக்கு வந்து தனது நண்பர்களுடன் இணைந்து இன்டீரியர் டெக்கரேஷன் வேலைகளை செய்து வந்தார். அப்படி இருக்கையில் ஒரு நாள் சினிமாவிற்கு அடித்தளமாக இருக்கும் கூத்துப்பட்டறை போஸ்டர் ஒன்றை பார்க்கிறார். அப்போதும் கூட அந்த கூத்துப்பட்டறையில்  அக்கவுண்டன்ட்டாகத்தான் பணிக்கு சேர்ந்துள்ளார். அதன் பிறகு தான் தனுஷின் புதுப்பேட்டை, கார்த்தியின் நான் மகான் அல்ல, வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட பல படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம். இந்தி என பிறமொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். 

 

ஆனால் விஜய் சேதுபதி 16 வயதில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நம்மவர் படத்தில் நடிப்பதற்காக நேர்காணலுக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கு நிராகரிக்கப்படுகிறார். ஆனால் அவரின் விடா முயற்சியால் அன்று யார் படத்தில் விஜய் சேதுபதி நிராகரிக்கப்பட்டாரோ இன்று அவருடனே விக்ரம் படத்தில் நடித்து பாராட்டுகளை குவித்து இருக்கிறார். அதனால் கடுமையாக உழைத்து முன்னேற வேண்டும் என்று நினைக்க கூடியவர்கள் விஜய் சேதுபதியை ரோல் மாடலாக வைத்துக் கொள்ளலாம்".