Skip to main content

"மனித உறவுகள் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாதா?" - தமிழ் இயக்குநர்கள் மீது எழுத்தாளர் சுரா அதிருப்தி

Published on 01/12/2021 | Edited on 01/12/2021

 

writer sura

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், ஓர் ஆண்டில் வெளியாகும் 90 சதவிகித தமிழ்ப்படங்கள் ஏன் தோல்வியடைகின்றன என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

"தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படம் வெளியாகிறது என்றால் 20 படங்கள்கூட வெற்றி பெறுவதில்லை. வெற்றி பெறும் படங்களின் விகிதம் 10 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது. பல ஆண்டுகளாக இந்த நிலை தொடருகிறது. ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட 190 படங்கள் தோல்வியடைகின்றன. இந்தப் படங்கள் ஏன் தோல்வியடைகின்றன. இந்தப் படங்களெல்லாம் ஏன் எடுக்கப்படுகின்றன? நாம் வெற்றி பெற்ற படங்களை பற்றி மட்டுமே பேசுகிறோம். அந்த ஓடாத படங்களின் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் கதி என்ன? இந்த மாதிரியான படங்களைத் தயாரித்த பல தயாரிப்பாளர்கள் ரோட்டில் பிச்சை எடுத்துள்ளனர்.  பல தயாரிப்பாளர்கள் வெறும் கையை வீசிக்கொண்டு தங்கள் கிராமத்திற்கே திரும்பிச் சென்றுவிட்டனர். நான் 30 ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கிறேன். 200 படங்களுக்கு மக்கள் தொடர்பாளராக பணியாற்றிய அனுபவத்தில் இதைக் கூறுகிறேன். நான் கலை படைப்பு உருவாக்கம் மற்றும் வியாபாரம் என இரண்டையும் அருகில் இருந்து பார்த்தவன். குறிப்பாக டிஜிட்டல் வடிவத்திற்கு சினிமா மாறிய பிறகு நிலைமை மிகவும் மோசமடைந்து விட்டது.

 

யார் வேண்டுமானாலும் தயாரிக்கலாம், இயக்கலாம், இசையமைக்கலாம், பாடலாம், நடிக்கலாம் என்ற நிலை இன்றைக்கு உள்ளது. எந்த வேலையாக இருந்தாலும் அதற்கு ஒரு தகுதி வேண்டும். பீம்சிங், ஸ்ரீதர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், பாலசந்தர், பாரதி ராஜா, மகேந்திரன், பாலு மகேந்திரா ஆகியோரெல்லாம் முறைப்படி சினிமாவை கற்றுவந்தவர்கள். கல்யாண வீடுகளில் வீடியோ எடுப்பவர்கள் கேமரா மேன் ஆகிவிட முடியுமா? மேசையை தட்டி பாட்டு பாடிக்கொண்டிருப்பவர்கள் இசையமைப்பாளர் ஆகிவிட முடியுமா? வயல்வெளியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் கிளம்பிவந்து நான் நடிகர் என்றால் நடிகராகிவிட முடியுமா? சிவாஜி கணேசன் மாதிரியான மேதைகளை பார்த்தது தமிழ் திரையுலகம். இது மாதிரியான உரிய தகுதி இல்லாத மனிதர்களால்தான் அந்த 190 படங்கள் தோல்வியடைகின்றன. 

 

ad

 

இன்றைக்கு வரும் படங்களில் ஆவி, பேய்தான் அதிகம் உள்ளன. காஞ்சனாவும் அரண்மனையும் வெற்றிபெற்றுவிட்டால் அது மாதிரியான படங்கள்தான் எடுக்க வேண்டுமா? இந்த இரு படங்களிலேயே 100 பாகங்கள் வரும் போல. இல்லையென்றால் ஒரு பெண்ணை துரத்தி துரத்தி காதலிப்பது மாதிரியான கதைகள் எடுக்கிறார்கள். வாழ்க்கையில் காதலைத் தாண்டி வேறு எதுவும் கிடையாதா? பேய் கதைகள், க்ரைம் கதைகள்தான் அதிகம் உழைப்பு தேவைப்படாத களங்கள். அதைத்தான் தமிழ் இயக்குநர்கள் இன்று மாறிமாறி பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். 

 

இரு கோடுகள், அவள் ஒரு தொடர்கதை, சொல்லத்தான் நினைக்கிறேன், அரங்கேற்றம் என அற்புதமான படங்களை பாலச்சந்தர் சார் கொடுத்தார். அதேபோல, மகேந்திரன் சார், பாலுமகேந்திரா சார் என்ன மாதிரியான படங்கள் எடுத்தார்கள் என்று யோசித்துப் பாருங்கள். மனித உணர்வுகளை அவ்வளவு அழகாக அவர்கள் படமாக்கினார்கள். அன்றைக்கு இருந்ததைவிட இன்றைக்கு மனித உறவுகள் சிக்கலானதாக உள்ளன. இப்படிப்பட்ட சூழலில் மனித உறவுகளை பற்றியெல்லாம் உங்களுக்கு எதுவும் தெரியாதா? யாருடனும் நீங்கள் பழகியதே இல்லையா? மனித உணர்வுகளை ஆழமாகப் புரிந்து கொள்ளும் சக்தி உங்களுக்கு இல்லையா? 

 

கேரளாவில் அவ்வளவு அழகான கதைக்களங்களுடன் படங்கள் வெளியாகின்றன. நம் ஆட்களிடம் கேட்டால் இந்தத் தலைமுறைக்கு ஏற்ற மாதிரி எடுக்கிறேன் என்கிறார்கள். அப்படி என்றால் கேரளாவில் எந்தத் தலைமுறை இருக்கிறது? கடந்த 5 வருடங்களுக்குள் திரைத்துறையில் அறிமுகமான இளைஞர்கள்தான் மலையாள சினிமாவை இன்று கலக்கிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களால் முடியும்போது ஏன் நம்மால் முடியவில்லை. முதலில் நிறைய வாசிக்கும் பழக்கம் இருக்க வேண்டும். தினசரி நாளிதழ்கள், வார இதழ்கள், நாவல்கள், பிற மொழி இலக்கியங்கள் என பரந்து வாசிக்கவேண்டும். இன்றைக்கு உள்ள ஆட்களுக்கு தினசரி நாளிதழ்கள் படிக்கும் பழக்கமே இல்லை. எதுவுமே தெரியாமல் சின்ன உலகத்தை உங்களுக்கென்று அமைத்துக்கொண்டு அதற்குள்ளேயே படம் எடுத்துக்கொண்டிருந்தால் படம் நிச்சயம் ஓடாது. மாறுபட்ட படங்களை இயக்க வேண்டும் என முயற்சியுங்கள். திரைத்துறை பற்றி எதுவும் தெரியாமல் சில தயாரிப்பாளர்கள் உள்ளே வந்து, சாவதற்கென்றே விளக்கில் வந்து விழும் விட்டில் பூச்சிகளாக மாறிவிடுகின்றனர். பல மேதைகள் அலங்கரித்த பட உலகம் இந்திய பட உலகம். அதைப் புரிந்துகொண்டு உங்கள் தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள். இன்று வெளியாகும் 90 சதவிகித படங்கள் தோல்வியைத் தழுவுகின்றன என்ற வேதனையில் இதைக் கூறுகிறேன்".  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சிவாஜி பேச மறுத்த வசனம்; அவருக்காக இவர் தான் பேசினார்” - எழுத்தாளர் சுரா பகிர்ந்த சுவாரசியம்  

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

sura

 

நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலுக்கு எழுத்தாளர் சுரா அவர்கள் ஞான ஒளி திரைப்படத்தின் ஒரு பாடல் பற்றி பகிர்ந்து கொண்ட சுவாரசியமான தகவல்கள் பின்வருமாறு…

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து நூறு நாட்கள் ஓடிய திரைப்படம் ஞான ஒளி. இத்திரைப்படத்தின்  கதை, வசனம் எழுதியவர்  வியட்நாம் வீடு சுந்தரம். இவர் சிவாஜி நாடக மன்றத்துக்கு வியட்நாம் வீடு  என்ற நாடகத்தை எழுதினார். நாடகத்தின் நாயகனாக சிவாஜி கணேசன் நடித்தார். நாடகத்தின் புகழ் காரணமாக, இதே கதையை சிவாஜி பிலிம்ஸ் திரைப்படமாக தயாரித்தது. பி.மாதவன் வியட்நாம் வீடு என்ற படத்தை இயக்கினார். இதுவும் நூறு நாட்கள் ஓடியது. பின்பு அதன் புகழ் காரணமாக கதை ஆசிரியர் சுந்தரம், வியட்நாம் வீடு சுந்தரம் என அழைக்கப்பட்டார். அதன் பிறகு, சிவாஜி கணேசனை வைத்து கௌரவம் என்ற படத்தை வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கினார். கதை ஆசிரியராக இருந்த வியட்நாம் வீடு சுந்தரம் இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநர் ஆனார்.  இந்தப் படமும்  நூறு நாட்கள் ஓடியது. 

 

இந்தத் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் வக்கீலாகவே வாழ்ந்து மிகவும் சிறப்பாக நடித்தார். அதன் பிறகு, கர்ணன் என்ற கதாபாத்திரம் மூலமும், சுந்தரம் என்ற கதாபாத்திரம் மூலமும் காலம் கடந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

 

இதே மாதிரி  ஞான ஒளி என்ற நாடகத்திற்கு வியட்நாம் சுந்தரம் கதை எழுதினார். நாடகத்தின் வெற்றி, அதன் புகழ் காரணமாக திரைப்படமாக ஜெ.ஆர்.மூவிஸ் என்ற நிறுவனம் தயாரித்தது. சிவாஜி கணேசன் உடன் இணைந்து மேஜர் சுந்தர்ராஜன் நடித்தார். இதுவும் நூறு நாட்கள் ஓடியது. பி.மாதவன் என்பவர் இயக்கினார். சிவாஜி கணேசன் நடித்த மிகச்சிறந்த திரைப்படங்களில் ஞான ஒளியும் ஒன்று. ஞான ஒளி திரைப்படத்தை இப்போது உள்ள தலைமுறையினர் பார்த்தால் கூட ஒரு மிகச்சிறந்த திரைப்படம் என்பதை உணரலாம். சிவாஜி கணேசன் எந்த அளவுக்கு ஆழமாக நடித்து முத்திரை பதித்து உள்ளார் என்பதை உணரலாம். ஆண்டனி என்ற கிறிஸ்தவ கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருப்பார் என்பதையும் அறியலாம். 

 

ஞான ஒளி திரைப்படத்தில் வரும், 'தேவனே என்னை பாருங்கள்' என்ற பாடல் இன்றளவும் மிகவும் பிரபலமாக வானொலி, மேடைகள், கலை நிகழ்ச்சிகளில் ஒலித்துக் கொண்டுள்ளது. இந்தப் பாடலின் நடுவில் வரும் வசனமான ‘ஓ  மை  லார்ட் பார்டன்  மீ,  இந்த மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் இரு வேறு பாதையில் போய் விட்டன’ என்ற வசனத்தை சிவாஜி உச்சரிக்க மறுத்து விட்டார். பின்பு அவரது உதவியாளர் ஜோசப்  கிருஷ்ணன் என்ற ஆங்கிலோ இந்தியரை வைத்து பாட வைக்க முடிவு செய்தனர். பின்பு தவிர்த்து விட்டனர். அதன் பிறகு, சதன் என்ற மிமிக்ரி கலைஞர் அவர்கள் மூலம் பாட வைக்கலாம் என முடிவு செய்தனர். ஆனால் அதுவும் ஒர்க்கவுட் ஆகவில்லை. 

 

பின்பு பாடல் மற்றும் வசனம் என இரண்டையும் டி.எம். செளந்தராஜன் அவர்களே பாடவும் முடிவு செய்தார்கள். இருந்தாலும் சிவாஜி எப்படி உச்சரிப்பாரோ அது போன்று உச்சரிக்க வேண்டும் என்று சிவாஜியை உச்சரிக்கச் சொல்லி, அதை காதில் வாங்கி, சிவாஜி எப்படி உச்சரிப்பாரோ அதே போன்று டி.எம்.சௌந்தரராஜன் பாடினார். சிவாஜி கணேசன் எந்த அளவிற்கு உணர்ச்சிவசப்பட்டு நடிப்பாரோ அந்த அளவிற்கு உச்சரித்தார் டி.எம்.எஸ்.  ஐம்பது சதவீதம் சிவாஜி கணேசன் அளவுக்கு உச்சரித்தார். அதனால் தான்  இரண்டு மாமன்னர்களும் காலங்கடந்து சென்றாலும், மக்கள் மனதில் பசுமையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

 


 

Next Story

"நிராகரித்தவர்கள் மத்தியில் தன்னை நிரூபித்தவர் விஜய் சேதுபதி" - எழுத்தாளர் சுரா பகிர்ந்த சுவாரசிய தகவல்

Published on 29/09/2022 | Edited on 29/09/2022

 

writer sura about talk vijay sethupathi

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில், நடிகர் விஜய் சேதுபதி குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு....

 

"சாதாரண நிலையில் இருந்து ஒரு உயர்ந்த இடத்திற்கு வந்துள்ள விஜய் சேதுபதியை நீங்கள் ரோல் மாடலாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர் தனது வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளை சந்தித்துள்ளார். தனது சொந்த ஊரான ராஜபாளையத்தில் இருந்து சினிமாவில் பெரிய ஆளாக்கிடனும்னு சென்னைக்கு வருகிறார். அந்த மாதிரி நேரடியா எடுத்த உடனே சினிமாவில் பெரிய ஆளாக்கி முடியாது என்பதை  உணர்ந்த விஜய் சேதுபதி ஒரு சிறிய சிமெண்ட் கம்பெனியில் அக்கவுண்டன்ட்டா வேலைக்கு சேர்ந்து பணி செய்துகொண்டு வருகிறார். அதன்பிறகு  செல்போன் கடை, பாஸ்ட்புட், சேல்ஸ்மேன் என கிடைக்கிற வேலை எல்லாம் செய்து வருகிறார். 

 

அந்த சமயத்தில் ஒரு நாள் விஜய் சேதுபதிக்கு துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் அக்கவுண்டன்ட்டாக நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கிறது. தொடர்ந்து 4 ஆண்டுகள் துபாயில் வேலை பார்த்தார். இதனிடையே ஆன்லைன் மூலம் ஜெஸி என்ற பெண்ணுடன் அறிமுகமாகி அவரையே திருமணமும் செய்துகொண்டார். ஒரு கட்டத்தில் துபாய் வேலையும் அவருக்கு பிடிக்காமல் போக, மீண்டும் சென்னைக்கு வந்து தனது நண்பர்களுடன் இணைந்து இன்டீரியர் டெக்கரேஷன் வேலைகளை செய்து வந்தார். அப்படி இருக்கையில் ஒரு நாள் சினிமாவிற்கு அடித்தளமாக இருக்கும் கூத்துப்பட்டறை போஸ்டர் ஒன்றை பார்க்கிறார். அப்போதும் கூட அந்த கூத்துப்பட்டறையில்  அக்கவுண்டன்ட்டாகத்தான் பணிக்கு சேர்ந்துள்ளார். அதன் பிறகு தான் தனுஷின் புதுப்பேட்டை, கார்த்தியின் நான் மகான் அல்ல, வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட பல படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம். இந்தி என பிறமொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். 

 

ஆனால் விஜய் சேதுபதி 16 வயதில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நம்மவர் படத்தில் நடிப்பதற்காக நேர்காணலுக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கு நிராகரிக்கப்படுகிறார். ஆனால் அவரின் விடா முயற்சியால் அன்று யார் படத்தில் விஜய் சேதுபதி நிராகரிக்கப்பட்டாரோ இன்று அவருடனே விக்ரம் படத்தில் நடித்து பாராட்டுகளை குவித்து இருக்கிறார். அதனால் கடுமையாக உழைத்து முன்னேற வேண்டும் என்று நினைக்க கூடியவர்கள் விஜய் சேதுபதியை ரோல் மாடலாக வைத்துக் கொள்ளலாம்".