Skip to main content

இரவு கார் பயணம்... சபல குணமுள்ள நண்பனால் மகள் குறித்து பயந்த தந்தை - கைதட்டல் அள்ளிய க்ளைமேக்ஸ் 

Published on 14/05/2022 | Edited on 14/05/2022

 

writer sura

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், 'அங்கிள்' என்ற மலையாள திரைப்படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

எந்த மொழியாக இருந்தாலும் மாறுபட்ட கதை, மாறுபட்ட கதாபாத்திரம், மாறுபட்ட கதைக்களத்தில் படம் எடுத்தால் அந்தப் படம் நிச்சயம் வெற்றிபெறும். மம்முட்டி நடிப்பில் 2018ஆம் ஆண்டு 'அங்கிள்' என்று ஒரு படம் வெளியானது. அந்தப் படத்தின் கதையே உணர்வுப்பூர்வமாக இருக்கும். மம்முட்டி கதாநாயகனாகவும் கார்த்திகா முரளிதரன் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். ஜாய் மேத்யூ தயாரிக்க, கிறிஸ் தாமோதரன் இயக்கியிருந்தார். 

 

காரில் மம்முட்டி பயணம் செய்துகொண்டு வருவார். கல்லூரி மாணவியான கதாநாயகி அவருடன் இணைந்து காரில் பயணிக்கிறாள். அந்தக் கார் பயணத்தில் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மொத்த கதை. கதாநாயகி ஸ்ருதிக்கு சொந்த ஊர் கோழிக்கோடு. ஊட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் ஹாஸ்டலில் தங்கி படிக்கிறாள். மாணவர்கள் ஸ்ட்ரைக் செய்ததால் கல்லூரிக்கு விடுமுறை விடப்படும். ஹாஸ்டலையும் மூடிவிடுவார்கள். அப்போது பேருந்து ஓட்டுநர்களும் ஸ்ட்ரைக் செய்ததால் பேருந்து வசதியும் நிறுத்தப்பட்டுவிடும். அதனால் ஊருக்கு கிளம்பிச் செல்வதில் கதாநாயகி ஸ்ருதிக்கு சிக்கல் ஏற்படும்.

 

அந்த நேரத்தில் கதாநாயகன் கிருஷ்ணகுமார் காரில் வருவார். அவர் மும்பையில் தொழிலதிபராக இருப்பார். கதாநாயகனும் கதாநாயகியின் அப்பாவும் ஒருகாலத்தில் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். கிருஷ்ணகுமாருக்கும் ஸ்ருதிக்கும் ஏற்கனவே அறிமுகம் இருந்தது. அதனால் ஸ்ருதியை பார்த்ததும் இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க என்று ஹீரோ கேட்பார். அவள் நிலைமையை எடுத்துச் சொன்னதும் நான் கோழிக்கோடுதான் போகிறேன் என்று சொல்லி அவளை காரில் ஏற்றிக்கொள்வார். அங்கிருந்து பயணம் தொடங்கும். கிருஷ்ணகுமார் அங்கிள் காரில் வருகிறேன் என்று வீட்டிற்கும் ஸ்ருதி தகவல் கொடுத்துவிடுவாள். 

 

கல்லூரி காலத்தில் மம்முட்டியின் கேரக்டர் பெண்களிடம் ஜொல்லுவிடக்கூடிய கேரக்டர். எந்தப் பெண்ணை பார்த்தாலும் அவளை அடைய வேண்டும் என்று நினைப்பார். அப்படிப்பட்டவருடன் நம் மகள் தனியாக வருகிறாளா என்று கதாநாயகியின் அப்பாக்கு பயம் வந்துவிடும். அடர்ந்த காடுகள் வழியாக பயணம் செய்துவர வேண்டும், நம் மகள் பாதுகாப்பாக வருவாளா என்று அவருக்குள் ஒரு குழப்பம் இருந்துகொண்டே இருக்கும். காட்டு வழி பாதை என்பதால் அடிக்கடி சென்போன் சிக்கலும் கட்டாகிவிடும். 

 

ஒருகட்டத்தில் பயணத்தை தொடரமுடியாது என்பதால் அங்கிருக்கும் ஒரு வீட்டில் தங்கவேண்டிய நிலை ஏற்படும். அது கணவனும் மனைவியும் வசித்துவரும் ஒரு தமிழரின் வீடு. நாயகன் மம்முட்டிக்கு அவர்கள் நன்கு தெரிந்தவர்கள். யாரென்றே தெரியாதவர்கள் வீட்டில் தங்குவதில் கதாநாயகிக்கு கொஞ்சம் பயம் வந்துவிடும். படம் பார்க்கும் நமக்கே ஒரு விதமான பயம் வந்துவிடும். ஆனால், எந்த அசம்பாவிதமும் நடக்காது.  

 

காலை பொழுதுவிடிந்ததும் இருவரும் கிளம்பிச் செல்வார்கள். வழியில் கதாநாயகனும் கதாநாயகியின் அப்பாவும் இளம்வயதில் பொழுதைக் கழித்த ஒரு ஏரி இருக்கும். அந்த இடத்திற்கு போவோமா என்று மம்முட்டி கேட்க அவளும் சரி என்று சொல்வாள். இருவரும் அந்த இடத்திற்கு சென்று செல்ஃபி எடுத்துக்கொண்டு இருக்கையில், வயது அதிகமுள்ள ஒருவர் எதோ ஒரு இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்துவந்து அவளிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறார் என்று நினைத்து அந்தப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துவிடுவார்கள். பின், போலீஸ் வந்து இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்துவார்கள். கதாநாயகியின் அப்பாவுக்கு போலீஸ் கொடுத்த தகவலையடுத்து, அவரும் குடும்பத்துடன் வந்துவிடுவார்.

 

பின்னர், அவர் குடும்ப நண்பர் என்பதை கதாநாயகியின் அம்மா எடுத்துச் சொல்லி அனைத்து குழப்பத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பார். அந்தக் காட்சிக்கு திரையரங்கில் கைதட்டல் அள்ளியது. பின், மம்முட்டியிடம் கதாநாயகியின் அப்பா, காலேஜ் டைம்ல நீ கொஞ்சம் அப்படி இப்படி இருந்தால் என் பொண்ணு உன்னோட தனியா ட்ராவல் பண்ணிவரனும் என்பதை நினைத்து ரொம்பவே பயந்துட்டேன்டா என்று கூறுவார். அதற்கு மம்முட்டி, என்னடா பேசுறா காலேஜ் டைம்ல நான் அப்படி இப்படி இருந்தது உண்மைதான். இது உன் மகள்டா, உனக்கு மகள் என்றால் எனக்கும் மகள்தானடா என்று சொல்லுவார். படத்தின் இந்த க்ளைமேக்ஸ் காட்சி அவ்வளவு உணர்வுப்பூர்வமாக கவித்துவத்துடன் இருக்கும்.     

 

நம்முடைய தமிழ்ப்பட இயக்குநர்களும் இது மாதிரியான வித்தியாசமான கதைக்களத்தை கையில் எடுக்கவேண்டும். பிரம்மாண்டமாக செலவழித்து, நிறைய கதாபாத்திரங்களை வைத்துதான் படம் எடுக்க வேண்டும் என்றில்லை. ஒரு கார், இரண்டு கதாபாத்திரத்தை வைத்தும் அற்புதமான படங்களை எடுக்கலாம் என்பதற்கு 'அங்கிள்' திரைப்படம் உதாரணம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சிவாஜி பேச மறுத்த வசனம்; அவருக்காக இவர் தான் பேசினார்” - எழுத்தாளர் சுரா பகிர்ந்த சுவாரசியம்  

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

sura

 

நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலுக்கு எழுத்தாளர் சுரா அவர்கள் ஞான ஒளி திரைப்படத்தின் ஒரு பாடல் பற்றி பகிர்ந்து கொண்ட சுவாரசியமான தகவல்கள் பின்வருமாறு…

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து நூறு நாட்கள் ஓடிய திரைப்படம் ஞான ஒளி. இத்திரைப்படத்தின்  கதை, வசனம் எழுதியவர்  வியட்நாம் வீடு சுந்தரம். இவர் சிவாஜி நாடக மன்றத்துக்கு வியட்நாம் வீடு  என்ற நாடகத்தை எழுதினார். நாடகத்தின் நாயகனாக சிவாஜி கணேசன் நடித்தார். நாடகத்தின் புகழ் காரணமாக, இதே கதையை சிவாஜி பிலிம்ஸ் திரைப்படமாக தயாரித்தது. பி.மாதவன் வியட்நாம் வீடு என்ற படத்தை இயக்கினார். இதுவும் நூறு நாட்கள் ஓடியது. பின்பு அதன் புகழ் காரணமாக கதை ஆசிரியர் சுந்தரம், வியட்நாம் வீடு சுந்தரம் என அழைக்கப்பட்டார். அதன் பிறகு, சிவாஜி கணேசனை வைத்து கௌரவம் என்ற படத்தை வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கினார். கதை ஆசிரியராக இருந்த வியட்நாம் வீடு சுந்தரம் இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநர் ஆனார்.  இந்தப் படமும்  நூறு நாட்கள் ஓடியது. 

 

இந்தத் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் வக்கீலாகவே வாழ்ந்து மிகவும் சிறப்பாக நடித்தார். அதன் பிறகு, கர்ணன் என்ற கதாபாத்திரம் மூலமும், சுந்தரம் என்ற கதாபாத்திரம் மூலமும் காலம் கடந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

 

இதே மாதிரி  ஞான ஒளி என்ற நாடகத்திற்கு வியட்நாம் சுந்தரம் கதை எழுதினார். நாடகத்தின் வெற்றி, அதன் புகழ் காரணமாக திரைப்படமாக ஜெ.ஆர்.மூவிஸ் என்ற நிறுவனம் தயாரித்தது. சிவாஜி கணேசன் உடன் இணைந்து மேஜர் சுந்தர்ராஜன் நடித்தார். இதுவும் நூறு நாட்கள் ஓடியது. பி.மாதவன் என்பவர் இயக்கினார். சிவாஜி கணேசன் நடித்த மிகச்சிறந்த திரைப்படங்களில் ஞான ஒளியும் ஒன்று. ஞான ஒளி திரைப்படத்தை இப்போது உள்ள தலைமுறையினர் பார்த்தால் கூட ஒரு மிகச்சிறந்த திரைப்படம் என்பதை உணரலாம். சிவாஜி கணேசன் எந்த அளவுக்கு ஆழமாக நடித்து முத்திரை பதித்து உள்ளார் என்பதை உணரலாம். ஆண்டனி என்ற கிறிஸ்தவ கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருப்பார் என்பதையும் அறியலாம். 

 

ஞான ஒளி திரைப்படத்தில் வரும், 'தேவனே என்னை பாருங்கள்' என்ற பாடல் இன்றளவும் மிகவும் பிரபலமாக வானொலி, மேடைகள், கலை நிகழ்ச்சிகளில் ஒலித்துக் கொண்டுள்ளது. இந்தப் பாடலின் நடுவில் வரும் வசனமான ‘ஓ  மை  லார்ட் பார்டன்  மீ,  இந்த மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் இரு வேறு பாதையில் போய் விட்டன’ என்ற வசனத்தை சிவாஜி உச்சரிக்க மறுத்து விட்டார். பின்பு அவரது உதவியாளர் ஜோசப்  கிருஷ்ணன் என்ற ஆங்கிலோ இந்தியரை வைத்து பாட வைக்க முடிவு செய்தனர். பின்பு தவிர்த்து விட்டனர். அதன் பிறகு, சதன் என்ற மிமிக்ரி கலைஞர் அவர்கள் மூலம் பாட வைக்கலாம் என முடிவு செய்தனர். ஆனால் அதுவும் ஒர்க்கவுட் ஆகவில்லை. 

 

பின்பு பாடல் மற்றும் வசனம் என இரண்டையும் டி.எம். செளந்தராஜன் அவர்களே பாடவும் முடிவு செய்தார்கள். இருந்தாலும் சிவாஜி எப்படி உச்சரிப்பாரோ அது போன்று உச்சரிக்க வேண்டும் என்று சிவாஜியை உச்சரிக்கச் சொல்லி, அதை காதில் வாங்கி, சிவாஜி எப்படி உச்சரிப்பாரோ அதே போன்று டி.எம்.சௌந்தரராஜன் பாடினார். சிவாஜி கணேசன் எந்த அளவிற்கு உணர்ச்சிவசப்பட்டு நடிப்பாரோ அந்த அளவிற்கு உச்சரித்தார் டி.எம்.எஸ்.  ஐம்பது சதவீதம் சிவாஜி கணேசன் அளவுக்கு உச்சரித்தார். அதனால் தான்  இரண்டு மாமன்னர்களும் காலங்கடந்து சென்றாலும், மக்கள் மனதில் பசுமையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

 


 

Next Story

"நிராகரித்தவர்கள் மத்தியில் தன்னை நிரூபித்தவர் விஜய் சேதுபதி" - எழுத்தாளர் சுரா பகிர்ந்த சுவாரசிய தகவல்

Published on 29/09/2022 | Edited on 29/09/2022

 

writer sura about talk vijay sethupathi

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில், நடிகர் விஜய் சேதுபதி குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு....

 

"சாதாரண நிலையில் இருந்து ஒரு உயர்ந்த இடத்திற்கு வந்துள்ள விஜய் சேதுபதியை நீங்கள் ரோல் மாடலாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர் தனது வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளை சந்தித்துள்ளார். தனது சொந்த ஊரான ராஜபாளையத்தில் இருந்து சினிமாவில் பெரிய ஆளாக்கிடனும்னு சென்னைக்கு வருகிறார். அந்த மாதிரி நேரடியா எடுத்த உடனே சினிமாவில் பெரிய ஆளாக்கி முடியாது என்பதை  உணர்ந்த விஜய் சேதுபதி ஒரு சிறிய சிமெண்ட் கம்பெனியில் அக்கவுண்டன்ட்டா வேலைக்கு சேர்ந்து பணி செய்துகொண்டு வருகிறார். அதன்பிறகு  செல்போன் கடை, பாஸ்ட்புட், சேல்ஸ்மேன் என கிடைக்கிற வேலை எல்லாம் செய்து வருகிறார். 

 

அந்த சமயத்தில் ஒரு நாள் விஜய் சேதுபதிக்கு துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் அக்கவுண்டன்ட்டாக நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கிறது. தொடர்ந்து 4 ஆண்டுகள் துபாயில் வேலை பார்த்தார். இதனிடையே ஆன்லைன் மூலம் ஜெஸி என்ற பெண்ணுடன் அறிமுகமாகி அவரையே திருமணமும் செய்துகொண்டார். ஒரு கட்டத்தில் துபாய் வேலையும் அவருக்கு பிடிக்காமல் போக, மீண்டும் சென்னைக்கு வந்து தனது நண்பர்களுடன் இணைந்து இன்டீரியர் டெக்கரேஷன் வேலைகளை செய்து வந்தார். அப்படி இருக்கையில் ஒரு நாள் சினிமாவிற்கு அடித்தளமாக இருக்கும் கூத்துப்பட்டறை போஸ்டர் ஒன்றை பார்க்கிறார். அப்போதும் கூட அந்த கூத்துப்பட்டறையில்  அக்கவுண்டன்ட்டாகத்தான் பணிக்கு சேர்ந்துள்ளார். அதன் பிறகு தான் தனுஷின் புதுப்பேட்டை, கார்த்தியின் நான் மகான் அல்ல, வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட பல படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம். இந்தி என பிறமொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். 

 

ஆனால் விஜய் சேதுபதி 16 வயதில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நம்மவர் படத்தில் நடிப்பதற்காக நேர்காணலுக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கு நிராகரிக்கப்படுகிறார். ஆனால் அவரின் விடா முயற்சியால் அன்று யார் படத்தில் விஜய் சேதுபதி நிராகரிக்கப்பட்டாரோ இன்று அவருடனே விக்ரம் படத்தில் நடித்து பாராட்டுகளை குவித்து இருக்கிறார். அதனால் கடுமையாக உழைத்து முன்னேற வேண்டும் என்று நினைக்க கூடியவர்கள் விஜய் சேதுபதியை ரோல் மாடலாக வைத்துக் கொள்ளலாம்".