Skip to main content

'மலையாள படத்தில் நடிப்பதற்காக கிறிஸ்தவராகவே மாறிய ரகுவரன்...' - எழுத்தாளர் சுரா பகிரும் மலரும் நினைவுகள்!

Published on 06/11/2021 | Edited on 06/11/2021

 

writer sura

 

எழுத்தாளரும் மூத்தப் பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், நடிகர் ரகுவரன் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

கதாபாத்திரமாகவே வாழ்கிறார் என்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனை கூறுவார்கள். சிவாஜி கணேசன் போல பல நடிகர்கள் கதாபாத்திரமாகவே வாழ்ந்து, அந்தக் கதாபாத்திரங்களை நம் மனதில் ஆழமாக பதிய வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். நடிகர் ரகுவரன் பற்றி உங்களுக்கு ஓர் உதாரணத்தைக் கூறுகிறேன். நடிகர் ரகுவரன் என்னுடைய நெருங்கிய நண்பர். ரகுவரனின் நடிப்பை நான் பக்கத்திலிருந்து பார்த்து ரசிப்பேன். படப்பிடிப்பு முடிந்த பிறகு அவரது அலுவலகத்தில் நானும் அவரும் அமர்ந்து இரவு நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருப்போம். பார்த்து ரசித்த படங்கள், படித்த கதைகள், நான் மொழிபெயர்த்த படைப்புகள் எனப் பல விஷயங்கள் பற்றி பேசுவோம். நான் சொல்வதை நடிகர் ரகுவரன் ஆர்வமாக கேட்பார். 

 

'தெய்வத்திண்டே விக்ரிதிகள்' என்ற மலையாள படத்தில் கதாநாயகனாக நடிக்க ரகுவரன் ஒப்பந்தம் ஆனார். மலையாள நவீன இலக்கியத்தின் மாமன்னரான எம்.முகுந்தன் எழுதிய 'தெய்வத்திண்டே விக்ரிதிகள்' என்ற நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. மறைந்த இயக்குநர் லெனின் ராஜேந்திரன் இப்படத்தை இயக்கினார். இந்திய மண்ணில் பிறந்த ஒருவனும் பிரான்சில் பிறந்த ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் தன்னுடைய தாய் நாடான பிரான்ஸ் செல்ல வேண்டும் என முடிவெடுத்து, தன்னுடைய கணவரை அழைக்கிறாள். ஆனால், கணவன் தான் பிறந்த மண்ணான இந்தியாவை விட்டுச்செல்ல மனமில்லாமல் மனைவியையும் குழந்தையையும் மட்டும் அனுப்பி வைப்பான். இதுதான் 'தெய்வத்திண்டே விக்ரிதிகள்' படத்தின் கதை. இப்படத்தில் நடிகர் ரகுவரன் கிறிஸ்தவராக நடித்திருப்பார். கறுப்பு பேண்ட், கறுப்பு கோர்ட், அதனுள்ளே ஒரு வெள்ளை சட்டை அணிந்திருப்பார். கழுத்தில் பாதிரியார்போல ஒரு பெரிய சிலுவையும் அணிந்திருப்பார்.  இப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்னரே இந்த தோற்றத்திற்கு ரகுவரன் மாறிவிட்டார். அவர் வீட்டிற்கு எப்போது சென்றாலும் அதே உடையணிந்திருப்பார். படத்தில் அந்தக் கதாபாத்திரம் அடிக்கடி மவுத் ஆர்கான் வாசிக்கும் என்பதால் கையில் ஒரு மவுத் ஆர்கானும் வைத்திருப்பார்.

 

அந்த சமயத்தில் நான் அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். ஷூட்டிங் தொடங்குவதற்குத்தான் இன்னும் பல நாட்கள் இருக்கின்றனவே... ஏன் இந்த கெட்டப்பிலேயே இருக்கிறீங்க என்றேன். அதற்கு ரகுவரன், இந்தப்படம் முடியுறவரை நான் ரகுவரன் கிடையாது. படம் முடிந்த பிறகுதான் இந்த சட்டை, சிலுவையை கழட்டுவேன் என்றார். ரகுவரனின் இந்தச் செயல் வினோதமாக இருந்தது. பின், கேரளாவில் படப்பிடிப்பு தொடங்கியது. என்னை ரயில்வே ஸ்டேஷன்வரை உடன்வரும்படி அழைத்தார். நாங்கள் இருவரும் ரயில் ஏறுவதற்காக காரில் சென்று கொண்டிருந்தோம். மவுண்ட் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது கார் திடீரென நின்றுவிட்டது. எவ்வளவோ முயற்சித்தும் காரை இயக்கமுடியவில்லை. வேறு வழியில்லாமல் ஆட்டோவில் செல்லலாம் என முடிவெடுத்து காரை விட்டு கீழே இறங்கினோம். அப்போது மாலை 5 மணி இருக்கும். அந்த ரோடு அவ்வளவு போக்குவரத்து நெரிசலாக இருந்தது. அங்கிருந்தவர்கள் ரகுவரனை எளிதில் அடையாளம் கண்டுவிட்டார்கள். கழுத்தில் சிலுவையுடன் இருப்பதை குழப்பத்துடன் பார்த்துக்கொண்டே சென்றனர். பின்னர், ரயில்வே ஸ்டேஷனுக்குள் அவர் நுழையும்போதும் அங்கிருந்தவர்கள் விநோதமாகப் பார்த்தார்கள்.

 

இது பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம். இன்றைக்கு ரகுவரன் உயிருடன் இல்லை. என் நண்பன் ரகுவரனிடம் நான் பார்த்த அந்த வித்தியாசமான குணத்தை நினைத்து பார்க்கும்போது ரகுவரன் மீது இனம் புரியாத மதிப்பும் மரியாதையும் ஏற்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சிவாஜி பேச மறுத்த வசனம்; அவருக்காக இவர் தான் பேசினார்” - எழுத்தாளர் சுரா பகிர்ந்த சுவாரசியம்  

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

sura

 

நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலுக்கு எழுத்தாளர் சுரா அவர்கள் ஞான ஒளி திரைப்படத்தின் ஒரு பாடல் பற்றி பகிர்ந்து கொண்ட சுவாரசியமான தகவல்கள் பின்வருமாறு…

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து நூறு நாட்கள் ஓடிய திரைப்படம் ஞான ஒளி. இத்திரைப்படத்தின்  கதை, வசனம் எழுதியவர்  வியட்நாம் வீடு சுந்தரம். இவர் சிவாஜி நாடக மன்றத்துக்கு வியட்நாம் வீடு  என்ற நாடகத்தை எழுதினார். நாடகத்தின் நாயகனாக சிவாஜி கணேசன் நடித்தார். நாடகத்தின் புகழ் காரணமாக, இதே கதையை சிவாஜி பிலிம்ஸ் திரைப்படமாக தயாரித்தது. பி.மாதவன் வியட்நாம் வீடு என்ற படத்தை இயக்கினார். இதுவும் நூறு நாட்கள் ஓடியது. பின்பு அதன் புகழ் காரணமாக கதை ஆசிரியர் சுந்தரம், வியட்நாம் வீடு சுந்தரம் என அழைக்கப்பட்டார். அதன் பிறகு, சிவாஜி கணேசனை வைத்து கௌரவம் என்ற படத்தை வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கினார். கதை ஆசிரியராக இருந்த வியட்நாம் வீடு சுந்தரம் இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநர் ஆனார்.  இந்தப் படமும்  நூறு நாட்கள் ஓடியது. 

 

இந்தத் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் வக்கீலாகவே வாழ்ந்து மிகவும் சிறப்பாக நடித்தார். அதன் பிறகு, கர்ணன் என்ற கதாபாத்திரம் மூலமும், சுந்தரம் என்ற கதாபாத்திரம் மூலமும் காலம் கடந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

 

இதே மாதிரி  ஞான ஒளி என்ற நாடகத்திற்கு வியட்நாம் சுந்தரம் கதை எழுதினார். நாடகத்தின் வெற்றி, அதன் புகழ் காரணமாக திரைப்படமாக ஜெ.ஆர்.மூவிஸ் என்ற நிறுவனம் தயாரித்தது. சிவாஜி கணேசன் உடன் இணைந்து மேஜர் சுந்தர்ராஜன் நடித்தார். இதுவும் நூறு நாட்கள் ஓடியது. பி.மாதவன் என்பவர் இயக்கினார். சிவாஜி கணேசன் நடித்த மிகச்சிறந்த திரைப்படங்களில் ஞான ஒளியும் ஒன்று. ஞான ஒளி திரைப்படத்தை இப்போது உள்ள தலைமுறையினர் பார்த்தால் கூட ஒரு மிகச்சிறந்த திரைப்படம் என்பதை உணரலாம். சிவாஜி கணேசன் எந்த அளவுக்கு ஆழமாக நடித்து முத்திரை பதித்து உள்ளார் என்பதை உணரலாம். ஆண்டனி என்ற கிறிஸ்தவ கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருப்பார் என்பதையும் அறியலாம். 

 

ஞான ஒளி திரைப்படத்தில் வரும், 'தேவனே என்னை பாருங்கள்' என்ற பாடல் இன்றளவும் மிகவும் பிரபலமாக வானொலி, மேடைகள், கலை நிகழ்ச்சிகளில் ஒலித்துக் கொண்டுள்ளது. இந்தப் பாடலின் நடுவில் வரும் வசனமான ‘ஓ  மை  லார்ட் பார்டன்  மீ,  இந்த மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் இரு வேறு பாதையில் போய் விட்டன’ என்ற வசனத்தை சிவாஜி உச்சரிக்க மறுத்து விட்டார். பின்பு அவரது உதவியாளர் ஜோசப்  கிருஷ்ணன் என்ற ஆங்கிலோ இந்தியரை வைத்து பாட வைக்க முடிவு செய்தனர். பின்பு தவிர்த்து விட்டனர். அதன் பிறகு, சதன் என்ற மிமிக்ரி கலைஞர் அவர்கள் மூலம் பாட வைக்கலாம் என முடிவு செய்தனர். ஆனால் அதுவும் ஒர்க்கவுட் ஆகவில்லை. 

 

பின்பு பாடல் மற்றும் வசனம் என இரண்டையும் டி.எம். செளந்தராஜன் அவர்களே பாடவும் முடிவு செய்தார்கள். இருந்தாலும் சிவாஜி எப்படி உச்சரிப்பாரோ அது போன்று உச்சரிக்க வேண்டும் என்று சிவாஜியை உச்சரிக்கச் சொல்லி, அதை காதில் வாங்கி, சிவாஜி எப்படி உச்சரிப்பாரோ அதே போன்று டி.எம்.சௌந்தரராஜன் பாடினார். சிவாஜி கணேசன் எந்த அளவிற்கு உணர்ச்சிவசப்பட்டு நடிப்பாரோ அந்த அளவிற்கு உச்சரித்தார் டி.எம்.எஸ்.  ஐம்பது சதவீதம் சிவாஜி கணேசன் அளவுக்கு உச்சரித்தார். அதனால் தான்  இரண்டு மாமன்னர்களும் காலங்கடந்து சென்றாலும், மக்கள் மனதில் பசுமையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

 


 

Next Story

"நிராகரித்தவர்கள் மத்தியில் தன்னை நிரூபித்தவர் விஜய் சேதுபதி" - எழுத்தாளர் சுரா பகிர்ந்த சுவாரசிய தகவல்

Published on 29/09/2022 | Edited on 29/09/2022

 

writer sura about talk vijay sethupathi

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில், நடிகர் விஜய் சேதுபதி குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு....

 

"சாதாரண நிலையில் இருந்து ஒரு உயர்ந்த இடத்திற்கு வந்துள்ள விஜய் சேதுபதியை நீங்கள் ரோல் மாடலாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர் தனது வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளை சந்தித்துள்ளார். தனது சொந்த ஊரான ராஜபாளையத்தில் இருந்து சினிமாவில் பெரிய ஆளாக்கிடனும்னு சென்னைக்கு வருகிறார். அந்த மாதிரி நேரடியா எடுத்த உடனே சினிமாவில் பெரிய ஆளாக்கி முடியாது என்பதை  உணர்ந்த விஜய் சேதுபதி ஒரு சிறிய சிமெண்ட் கம்பெனியில் அக்கவுண்டன்ட்டா வேலைக்கு சேர்ந்து பணி செய்துகொண்டு வருகிறார். அதன்பிறகு  செல்போன் கடை, பாஸ்ட்புட், சேல்ஸ்மேன் என கிடைக்கிற வேலை எல்லாம் செய்து வருகிறார். 

 

அந்த சமயத்தில் ஒரு நாள் விஜய் சேதுபதிக்கு துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் அக்கவுண்டன்ட்டாக நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கிறது. தொடர்ந்து 4 ஆண்டுகள் துபாயில் வேலை பார்த்தார். இதனிடையே ஆன்லைன் மூலம் ஜெஸி என்ற பெண்ணுடன் அறிமுகமாகி அவரையே திருமணமும் செய்துகொண்டார். ஒரு கட்டத்தில் துபாய் வேலையும் அவருக்கு பிடிக்காமல் போக, மீண்டும் சென்னைக்கு வந்து தனது நண்பர்களுடன் இணைந்து இன்டீரியர் டெக்கரேஷன் வேலைகளை செய்து வந்தார். அப்படி இருக்கையில் ஒரு நாள் சினிமாவிற்கு அடித்தளமாக இருக்கும் கூத்துப்பட்டறை போஸ்டர் ஒன்றை பார்க்கிறார். அப்போதும் கூட அந்த கூத்துப்பட்டறையில்  அக்கவுண்டன்ட்டாகத்தான் பணிக்கு சேர்ந்துள்ளார். அதன் பிறகு தான் தனுஷின் புதுப்பேட்டை, கார்த்தியின் நான் மகான் அல்ல, வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட பல படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம். இந்தி என பிறமொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். 

 

ஆனால் விஜய் சேதுபதி 16 வயதில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நம்மவர் படத்தில் நடிப்பதற்காக நேர்காணலுக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கு நிராகரிக்கப்படுகிறார். ஆனால் அவரின் விடா முயற்சியால் அன்று யார் படத்தில் விஜய் சேதுபதி நிராகரிக்கப்பட்டாரோ இன்று அவருடனே விக்ரம் படத்தில் நடித்து பாராட்டுகளை குவித்து இருக்கிறார். அதனால் கடுமையாக உழைத்து முன்னேற வேண்டும் என்று நினைக்க கூடியவர்கள் விஜய் சேதுபதியை ரோல் மாடலாக வைத்துக் கொள்ளலாம்".