Skip to main content

உலகமே கொண்டாடிய கதையை தமிழ் ரசிகர்கள் கண்டுகொள்ளவேயில்லை - எழுத்தாளர் சுரா ஆதங்கம்!

Published on 17/12/2021 | Edited on 17/12/2021

 

writer sura

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், கிகுஜிரோ திரைப்படம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...  

 

"வழக்கமாக தமிழ்த் திரைப்படங்கள், தமிழ்த் திரைப்பட உலகம் குறித்து உங்களுடன் பகிர்ந்துகொள்வேன். இந்த முறை சிறு மாறுதலாக இருக்கட்டும் என்று டாகேஷி கிட்டானோ இயக்கிய கிகுஜிரோ என்ற ஜப்பானிய திரைப்படம் குறித்து கூறுகிறேன். அவர்தான் இந்தப் படத்தின் கதாநாயகன். குடும்ப கதைகளை அருமையாக இயக்கக்கூடியவர் டாகேஷி கிட்டானோ. படம் முடிந்து வெளியே வந்த பிறகும் அவர் உருவாக்கிய கதாபாத்திரங்கள் நம் மனதிற்குள் வாழ்ந்து கொண்டே இருக்கும். பல உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு உலகம் முழுவதும் பலராலும் கொண்டாடப்பட்ட திரைப்படம் கிகுஜிரோ. 

 

மசாவோ என்ற ஒன்பது வயதுடைய பள்ளி மாணவன், ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகரின் புறநகர் பகுதியில் பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்து கொண்டிருப்பான். அங்கிருந்து பல நூறு கிலோமீட்டர் தாண்டி ஒரு நிறுவனத்தில் அவனுடைய அம்மா வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார். அங்கிருந்து தன் மகள் அனுப்பும் பணத்தைக் கொண்டு மசாவோ பாட்டி அவனை வளர்த்துவந்தார். பள்ளியில் கோடை விடுமுறை விடப்படுகிறது. பாட்டி காலையில் வேலைக்குச் சென்று மாலையில்தான் வீடு திரும்புவார் என்பதால் பகல் முழுவதும் இவன் தனியாக இருக்க நேரிடுகிறது. அவனுடன் படிக்கும் பிற குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் இணைந்து கோடை விடுமுறை சுற்றுலா சென்றுவிட்டனர். பள்ளி மைதானத்திற்கு விளையாட செல்லலாம் என்று நினைத்து இவன் சென்றால் அங்கு யாருமே இல்லை. அங்கிருந்த பி.டி.மாஸ்டர் எல்லோரும் அவர்களுடைய சொந்தக்காரர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டனர். பள்ளி திறக்கும்போதுதான் திரும்பி வருவார்கள். நீ எங்கும் போகலயா? உனக்கு சொந்தக்காரர்கள் இல்லையா என்பார். 

 

வீட்டிற்கு திரும்பிவருவான். இவனிடம் அவன் அம்மா போட்டோ இருக்கும். இவன் அம்மாவை இதுவரை நேரில் பார்த்ததேயில்லை. அவனுடைய பாட்டி இதுதான் உன் அம்மா என்று ஒருமுறை ஒரு போட்டோவை கொடுத்தார். அந்த போட்டோவை எடுத்து பார்த்தபோது அதன் பின்புறம் ஒரு முகவரி இருந்தது. அம்மாவை சென்று பார்த்தால் என்ன என்று அவனுக்கு யோசனை தோன்றுகிறது. அவனுடைய பாட்டிக்கு தெரிந்த கிகுஜிரோ என்பவரோடு இணைந்து பாட்டிக்கு தெரியாமல் அம்மாவை சந்திக்க செல்வான். அவர்களுடைய பயணமே சுவாரஸ்யமாக இருக்கும். 

 

அந்த முகவரிக்கு அருகே வந்ததும் மசாவோவை இங்கேயே நில்... நான் வேட்டை கண்டுபிடித்துவிட்டு வருகிறேன் எனக் கூறிவிட்டு கிகுஜிரோ மட்டும் செல்வான். அவனுடைய அம்மா இங்கே வேறு ஒரு ஆணுடன் இணைந்து வாழ்ந்துகொண்டு இருப்பாள். அவளுக்கு இங்கும் ஒரு குழந்தை இருக்கும். இதைக் கண்டு அதிர்ச்சியான கிகுஜிரோ, மசாவோவிடம் வந்து உங்க அம்மா இங்கு இல்லை. வேறு யாரோ இருக்கிறார்கள். அவர் முன்னரே இந்த வீட்டை காலி செய்துவிட்டாராம் என்பான். தன்னுடைய அம்மாவை காணவேண்டும் என்று ஆவலுடன் வந்த அந்தச் சிறுவனுக்கு ஏமாற்றம் ஆகிவிடும். பின், இருவரும் அவர்கள் ஊருக்கு திரும்பி வந்துவிடுவார்கள்.  

 

இதே மாதிரியான கதையில் நந்தலாலா படத்தை மிஷ்கின் இயக்கினார். அந்தப் படம் இங்கு பேசப்படவேயில்லை. பத்திரிகைகள்கூட பெரிய அளவில் நந்தலாலா படத்தை பாராட்டவில்லை. அருமையான, ஆழமான, உணர்ச்சிமயமான கதைக்களம் கிகுஜிரோ. உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட ஒரு கதை நம் தமிழ்நாட்டில் கண்டுகொள்ளப்படவேயில்லை".

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சிவாஜி பேச மறுத்த வசனம்; அவருக்காக இவர் தான் பேசினார்” - எழுத்தாளர் சுரா பகிர்ந்த சுவாரசியம்  

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

sura

 

நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலுக்கு எழுத்தாளர் சுரா அவர்கள் ஞான ஒளி திரைப்படத்தின் ஒரு பாடல் பற்றி பகிர்ந்து கொண்ட சுவாரசியமான தகவல்கள் பின்வருமாறு…

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து நூறு நாட்கள் ஓடிய திரைப்படம் ஞான ஒளி. இத்திரைப்படத்தின்  கதை, வசனம் எழுதியவர்  வியட்நாம் வீடு சுந்தரம். இவர் சிவாஜி நாடக மன்றத்துக்கு வியட்நாம் வீடு  என்ற நாடகத்தை எழுதினார். நாடகத்தின் நாயகனாக சிவாஜி கணேசன் நடித்தார். நாடகத்தின் புகழ் காரணமாக, இதே கதையை சிவாஜி பிலிம்ஸ் திரைப்படமாக தயாரித்தது. பி.மாதவன் வியட்நாம் வீடு என்ற படத்தை இயக்கினார். இதுவும் நூறு நாட்கள் ஓடியது. பின்பு அதன் புகழ் காரணமாக கதை ஆசிரியர் சுந்தரம், வியட்நாம் வீடு சுந்தரம் என அழைக்கப்பட்டார். அதன் பிறகு, சிவாஜி கணேசனை வைத்து கௌரவம் என்ற படத்தை வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கினார். கதை ஆசிரியராக இருந்த வியட்நாம் வீடு சுந்தரம் இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநர் ஆனார்.  இந்தப் படமும்  நூறு நாட்கள் ஓடியது. 

 

இந்தத் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் வக்கீலாகவே வாழ்ந்து மிகவும் சிறப்பாக நடித்தார். அதன் பிறகு, கர்ணன் என்ற கதாபாத்திரம் மூலமும், சுந்தரம் என்ற கதாபாத்திரம் மூலமும் காலம் கடந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

 

இதே மாதிரி  ஞான ஒளி என்ற நாடகத்திற்கு வியட்நாம் சுந்தரம் கதை எழுதினார். நாடகத்தின் வெற்றி, அதன் புகழ் காரணமாக திரைப்படமாக ஜெ.ஆர்.மூவிஸ் என்ற நிறுவனம் தயாரித்தது. சிவாஜி கணேசன் உடன் இணைந்து மேஜர் சுந்தர்ராஜன் நடித்தார். இதுவும் நூறு நாட்கள் ஓடியது. பி.மாதவன் என்பவர் இயக்கினார். சிவாஜி கணேசன் நடித்த மிகச்சிறந்த திரைப்படங்களில் ஞான ஒளியும் ஒன்று. ஞான ஒளி திரைப்படத்தை இப்போது உள்ள தலைமுறையினர் பார்த்தால் கூட ஒரு மிகச்சிறந்த திரைப்படம் என்பதை உணரலாம். சிவாஜி கணேசன் எந்த அளவுக்கு ஆழமாக நடித்து முத்திரை பதித்து உள்ளார் என்பதை உணரலாம். ஆண்டனி என்ற கிறிஸ்தவ கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருப்பார் என்பதையும் அறியலாம். 

 

ஞான ஒளி திரைப்படத்தில் வரும், 'தேவனே என்னை பாருங்கள்' என்ற பாடல் இன்றளவும் மிகவும் பிரபலமாக வானொலி, மேடைகள், கலை நிகழ்ச்சிகளில் ஒலித்துக் கொண்டுள்ளது. இந்தப் பாடலின் நடுவில் வரும் வசனமான ‘ஓ  மை  லார்ட் பார்டன்  மீ,  இந்த மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் இரு வேறு பாதையில் போய் விட்டன’ என்ற வசனத்தை சிவாஜி உச்சரிக்க மறுத்து விட்டார். பின்பு அவரது உதவியாளர் ஜோசப்  கிருஷ்ணன் என்ற ஆங்கிலோ இந்தியரை வைத்து பாட வைக்க முடிவு செய்தனர். பின்பு தவிர்த்து விட்டனர். அதன் பிறகு, சதன் என்ற மிமிக்ரி கலைஞர் அவர்கள் மூலம் பாட வைக்கலாம் என முடிவு செய்தனர். ஆனால் அதுவும் ஒர்க்கவுட் ஆகவில்லை. 

 

பின்பு பாடல் மற்றும் வசனம் என இரண்டையும் டி.எம். செளந்தராஜன் அவர்களே பாடவும் முடிவு செய்தார்கள். இருந்தாலும் சிவாஜி எப்படி உச்சரிப்பாரோ அது போன்று உச்சரிக்க வேண்டும் என்று சிவாஜியை உச்சரிக்கச் சொல்லி, அதை காதில் வாங்கி, சிவாஜி எப்படி உச்சரிப்பாரோ அதே போன்று டி.எம்.சௌந்தரராஜன் பாடினார். சிவாஜி கணேசன் எந்த அளவிற்கு உணர்ச்சிவசப்பட்டு நடிப்பாரோ அந்த அளவிற்கு உச்சரித்தார் டி.எம்.எஸ்.  ஐம்பது சதவீதம் சிவாஜி கணேசன் அளவுக்கு உச்சரித்தார். அதனால் தான்  இரண்டு மாமன்னர்களும் காலங்கடந்து சென்றாலும், மக்கள் மனதில் பசுமையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

 


 

Next Story

"நிராகரித்தவர்கள் மத்தியில் தன்னை நிரூபித்தவர் விஜய் சேதுபதி" - எழுத்தாளர் சுரா பகிர்ந்த சுவாரசிய தகவல்

Published on 29/09/2022 | Edited on 29/09/2022

 

writer sura about talk vijay sethupathi

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில், நடிகர் விஜய் சேதுபதி குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு....

 

"சாதாரண நிலையில் இருந்து ஒரு உயர்ந்த இடத்திற்கு வந்துள்ள விஜய் சேதுபதியை நீங்கள் ரோல் மாடலாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர் தனது வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளை சந்தித்துள்ளார். தனது சொந்த ஊரான ராஜபாளையத்தில் இருந்து சினிமாவில் பெரிய ஆளாக்கிடனும்னு சென்னைக்கு வருகிறார். அந்த மாதிரி நேரடியா எடுத்த உடனே சினிமாவில் பெரிய ஆளாக்கி முடியாது என்பதை  உணர்ந்த விஜய் சேதுபதி ஒரு சிறிய சிமெண்ட் கம்பெனியில் அக்கவுண்டன்ட்டா வேலைக்கு சேர்ந்து பணி செய்துகொண்டு வருகிறார். அதன்பிறகு  செல்போன் கடை, பாஸ்ட்புட், சேல்ஸ்மேன் என கிடைக்கிற வேலை எல்லாம் செய்து வருகிறார். 

 

அந்த சமயத்தில் ஒரு நாள் விஜய் சேதுபதிக்கு துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் அக்கவுண்டன்ட்டாக நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கிறது. தொடர்ந்து 4 ஆண்டுகள் துபாயில் வேலை பார்த்தார். இதனிடையே ஆன்லைன் மூலம் ஜெஸி என்ற பெண்ணுடன் அறிமுகமாகி அவரையே திருமணமும் செய்துகொண்டார். ஒரு கட்டத்தில் துபாய் வேலையும் அவருக்கு பிடிக்காமல் போக, மீண்டும் சென்னைக்கு வந்து தனது நண்பர்களுடன் இணைந்து இன்டீரியர் டெக்கரேஷன் வேலைகளை செய்து வந்தார். அப்படி இருக்கையில் ஒரு நாள் சினிமாவிற்கு அடித்தளமாக இருக்கும் கூத்துப்பட்டறை போஸ்டர் ஒன்றை பார்க்கிறார். அப்போதும் கூட அந்த கூத்துப்பட்டறையில்  அக்கவுண்டன்ட்டாகத்தான் பணிக்கு சேர்ந்துள்ளார். அதன் பிறகு தான் தனுஷின் புதுப்பேட்டை, கார்த்தியின் நான் மகான் அல்ல, வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட பல படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம். இந்தி என பிறமொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். 

 

ஆனால் விஜய் சேதுபதி 16 வயதில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நம்மவர் படத்தில் நடிப்பதற்காக நேர்காணலுக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கு நிராகரிக்கப்படுகிறார். ஆனால் அவரின் விடா முயற்சியால் அன்று யார் படத்தில் விஜய் சேதுபதி நிராகரிக்கப்பட்டாரோ இன்று அவருடனே விக்ரம் படத்தில் நடித்து பாராட்டுகளை குவித்து இருக்கிறார். அதனால் கடுமையாக உழைத்து முன்னேற வேண்டும் என்று நினைக்க கூடியவர்கள் விஜய் சேதுபதியை ரோல் மாடலாக வைத்துக் கொள்ளலாம்".