Skip to main content

தனுஷ் படத்திற்காக பாடுகிறோம் எனத் தெரியாமல் பாடிய கிடாக்குழி மாரியம்மா; விஷயம் தெரிந்ததும் அவர் கொடுத்த ரியாக்ஷன்!

Published on 28/05/2021 | Edited on 28/05/2021

 

writer sura

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூ-ட்யூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். 'திரைக்குப் பின்னால்' நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடகி கிடாக்குழி மாரியம்மா குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களின் ஏகோபித்த வரவேற்போடு மாபெரும் வெற்றிபெற்றது. அப்படத்தில் இடம்பெற்றிருந்த 'கண்டா வரச் சொல்லுங்க...' என்ற பாடல், படம் வெளியாவதற்கு முன்பே வெளியாகி படம் குறித்து பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்தப் பாடலைப் பாடியது கிடாக்குழி மாரியம்மா என்ற 50 வயது நாட்டுப்புற பாடகி என்பது நாம் அறிந்ததே. அந்தப்பாடல் வெளியான பிறகு, ஒரே இரவில் மிக உயர்ந்த இடத்தை கிடாக்குழி மாரியம்மா அடைந்துவிட்டார். 

 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிடாக்குழி என்ற கிராமத்தைச் சேர்ந்த இவர், சிறு வயது முதலே பாடல்கள் பாடுவதில் ஆர்வம் உடையவராக இருந்துள்ளார். பொதுவாக கிராமங்களில் நாற்று நடுவது, களை எடுப்பது போன்ற விவசாயப் பணிகளின்போது வேலை அலுப்பு தெரியாமல் இருப்பதற்காக பாடிக்கொண்டே வேலை செய்வார்கள். அப்படி கிடாக்குழி மாரியம்மா சிறப்பாகப் பாடுவதைக் கேட்ட அந்த ஊர் ஆட்கள், ஊர் திருவிழாக்களில் பாட அவரை மேடையேற்றியுள்ளனர். அந்தக் கிராமத்தினுள் கிடாக்குழி மாரியம்மாளுக்கு நல்ல பெயர் கிடைக்க ஆரம்பித்தபோது, கோட்டைச்சாமி என்ற பிரபல நாட்டுப்புறப் பாடகரின் அறிமுகமும் கிடைக்கிறது. ஆடியோ கேசட்டுகள் மட்டும் இருந்த அந்தக் காலத்தில், கோட்டைச்சாமி பாடல்கள் என்றே தனி கேசட்டுகள் கிடைக்கும். அந்த அளவிற்கு புகழ் பெற்றவராக கோட்டைச்சாமி இருந்தார். மாரியம்மாவிற்கு 13 வயதாக இருக்கும்போதே கோட்டைச்சாமியின் இசைக்குழுவில் சேர்ந்து பாட ஆரம்பிக்கிறார். அந்த இசைக்குழு சுற்றுவட்டாரத்தில் உள்ள பல இடங்களில் இசைக்கச்சேரி நடத்தக்கூடிய  குழு என்பதால் தன்னுடைய கிராம அளவில் இருந்த மாரியம்மாவின் புகழ், பக்கத்து ஊர்களிலும் பரவ ஆரம்பிக்கிறது. பின்னாட்களில் கோட்டைச்சாமி மாரியம்மாவையே திருமணம் செய்துகொள்கிறார்.

 

காலங்கள் ஓடின. 13 வயதில் மேடையில் அறிமுகமான கிடாக்குழி மாரியம்மாவிற்கு 50 வயது இருக்கும்போது முதல் சினிமா வாய்ப்பு கிடைக்கிறது. இதற்கிடையில் அவர் கணவர் இறந்துவிட்டார். மாரியம்மாவும் நிறைய பாடல்கள் பாடி, தனி கேசட்டுகளெல்லாம் வெளியிட்டு நாட்டுப்புறப் பாடகர்கள் வட்டாரத்தில் மிகப்பெரிய நட்சத்திரமாக வலம்வந்துகொண்டிருந்தார். 40 வயதைத் தாண்டிவிட்டாலே வாழ்க்கையில் எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறார்கள். நமக்கான வாய்ப்பும் அங்கீகாரமும் எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம் என்பதற்கு உதாரணம் கிடாக்குழி மாரியம்மா.

 

மாரி செல்வராஜின் முதல் படமான ‘பரியேறும் பெருமா’ளில் பாடகர் அந்தோணி தாசன் பாடியிருந்தார். அவரிடம், “‘கர்ணன்’ திரைப்படத்தில் வயதான நாட்டுப்புற பாடகி குரலில் ஒரு பாடல் உள்ளது. அதைப் பாடுவதற்கு யாரவது உங்களுக்குத் தெரியுமா” என மாரி செல்வராஜ் கேட்டுள்ளார். அவர்தான் கிடாக்குழி மாரியம்மா பற்றிக்கூறி, அவருடைய பாடல்களையும் மாரி செல்வராஜிடம் காண்பித்துள்ளார். மாரி செல்வராஜ் எதிர்பார்த்த குரல்போலவே கிடாக்குழி மாரியம்மாவின் குரலும் இருந்ததால் அவரையே பாடவைத்துவிடலாம் என மாரி செல்வராஜ் முடிவெடுக்கிறார். உடனே அவர் சென்னை அழைத்துவரப்படுகிறார். பாடல் பதிவு முடிவடியும்வரை தனுஷ் படத்திற்குத்தான் நீங்கள் பாடுகிறீர்கள் என்ற விவரம் அவருக்குத் தெரிவிக்கப்படவில்லை. பாடல் பதிவு முடிந்தவுடன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் தனுஷுடன் ஃபோனில் பேசியுள்ளார். அதன் பிறகே, தனுஷ் படத்திற்காகத்தான் இந்தப் பாடல் பதிவு செய்யப்பட்டது என அவரிடம் கூறியுள்ளனர். கிடாக்குழி மாரியம்மாவினால் அதை நம்பமுடியவில்லையாம். இது நடப்பது நனவிலா கனவிலா எனத் தன்னுடைய கையைக் கிள்ளிப்பார்த்துக்கொண்டதாக சொன்னார்கள். 

 

நடிகர் தனுஷ் நடித்த படமென்பதாலும், மாறுபட்ட ரசனை கொண்ட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய படமென்பதாலும் அதில் பாடிய மாரியம்மாவின் பாடல் ஒரே இரவில் சூப்பர் ஹிட் அடித்தது. உலகெமெங்கும் இருக்கக்கூடிய பலகோடி தமிழ் மக்களை இப்பாடல் சென்றடைந்ததும் மாரியம்மா என்ற நட்சத்திரம் மிகப்பெரிய அளவில் ஜொலிக்கத் தொடங்கிவிட்டது. இந்த வெற்றிக்குப் பிறகு கிடாக்குழி மாரியம்மாவை, 'உன்னுடைய பிறவிப்பயனை நீ அடைந்துவிட்டாய்' என அவருடைய ஊர் மக்கள், உறவினர்கள் என அனைவரும் பாராட்டியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சிவாஜி பேச மறுத்த வசனம்; அவருக்காக இவர் தான் பேசினார்” - எழுத்தாளர் சுரா பகிர்ந்த சுவாரசியம்  

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

sura

 

நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலுக்கு எழுத்தாளர் சுரா அவர்கள் ஞான ஒளி திரைப்படத்தின் ஒரு பாடல் பற்றி பகிர்ந்து கொண்ட சுவாரசியமான தகவல்கள் பின்வருமாறு…

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து நூறு நாட்கள் ஓடிய திரைப்படம் ஞான ஒளி. இத்திரைப்படத்தின்  கதை, வசனம் எழுதியவர்  வியட்நாம் வீடு சுந்தரம். இவர் சிவாஜி நாடக மன்றத்துக்கு வியட்நாம் வீடு  என்ற நாடகத்தை எழுதினார். நாடகத்தின் நாயகனாக சிவாஜி கணேசன் நடித்தார். நாடகத்தின் புகழ் காரணமாக, இதே கதையை சிவாஜி பிலிம்ஸ் திரைப்படமாக தயாரித்தது. பி.மாதவன் வியட்நாம் வீடு என்ற படத்தை இயக்கினார். இதுவும் நூறு நாட்கள் ஓடியது. பின்பு அதன் புகழ் காரணமாக கதை ஆசிரியர் சுந்தரம், வியட்நாம் வீடு சுந்தரம் என அழைக்கப்பட்டார். அதன் பிறகு, சிவாஜி கணேசனை வைத்து கௌரவம் என்ற படத்தை வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கினார். கதை ஆசிரியராக இருந்த வியட்நாம் வீடு சுந்தரம் இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநர் ஆனார்.  இந்தப் படமும்  நூறு நாட்கள் ஓடியது. 

 

இந்தத் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் வக்கீலாகவே வாழ்ந்து மிகவும் சிறப்பாக நடித்தார். அதன் பிறகு, கர்ணன் என்ற கதாபாத்திரம் மூலமும், சுந்தரம் என்ற கதாபாத்திரம் மூலமும் காலம் கடந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

 

இதே மாதிரி  ஞான ஒளி என்ற நாடகத்திற்கு வியட்நாம் சுந்தரம் கதை எழுதினார். நாடகத்தின் வெற்றி, அதன் புகழ் காரணமாக திரைப்படமாக ஜெ.ஆர்.மூவிஸ் என்ற நிறுவனம் தயாரித்தது. சிவாஜி கணேசன் உடன் இணைந்து மேஜர் சுந்தர்ராஜன் நடித்தார். இதுவும் நூறு நாட்கள் ஓடியது. பி.மாதவன் என்பவர் இயக்கினார். சிவாஜி கணேசன் நடித்த மிகச்சிறந்த திரைப்படங்களில் ஞான ஒளியும் ஒன்று. ஞான ஒளி திரைப்படத்தை இப்போது உள்ள தலைமுறையினர் பார்த்தால் கூட ஒரு மிகச்சிறந்த திரைப்படம் என்பதை உணரலாம். சிவாஜி கணேசன் எந்த அளவுக்கு ஆழமாக நடித்து முத்திரை பதித்து உள்ளார் என்பதை உணரலாம். ஆண்டனி என்ற கிறிஸ்தவ கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருப்பார் என்பதையும் அறியலாம். 

 

ஞான ஒளி திரைப்படத்தில் வரும், 'தேவனே என்னை பாருங்கள்' என்ற பாடல் இன்றளவும் மிகவும் பிரபலமாக வானொலி, மேடைகள், கலை நிகழ்ச்சிகளில் ஒலித்துக் கொண்டுள்ளது. இந்தப் பாடலின் நடுவில் வரும் வசனமான ‘ஓ  மை  லார்ட் பார்டன்  மீ,  இந்த மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் இரு வேறு பாதையில் போய் விட்டன’ என்ற வசனத்தை சிவாஜி உச்சரிக்க மறுத்து விட்டார். பின்பு அவரது உதவியாளர் ஜோசப்  கிருஷ்ணன் என்ற ஆங்கிலோ இந்தியரை வைத்து பாட வைக்க முடிவு செய்தனர். பின்பு தவிர்த்து விட்டனர். அதன் பிறகு, சதன் என்ற மிமிக்ரி கலைஞர் அவர்கள் மூலம் பாட வைக்கலாம் என முடிவு செய்தனர். ஆனால் அதுவும் ஒர்க்கவுட் ஆகவில்லை. 

 

பின்பு பாடல் மற்றும் வசனம் என இரண்டையும் டி.எம். செளந்தராஜன் அவர்களே பாடவும் முடிவு செய்தார்கள். இருந்தாலும் சிவாஜி எப்படி உச்சரிப்பாரோ அது போன்று உச்சரிக்க வேண்டும் என்று சிவாஜியை உச்சரிக்கச் சொல்லி, அதை காதில் வாங்கி, சிவாஜி எப்படி உச்சரிப்பாரோ அதே போன்று டி.எம்.சௌந்தரராஜன் பாடினார். சிவாஜி கணேசன் எந்த அளவிற்கு உணர்ச்சிவசப்பட்டு நடிப்பாரோ அந்த அளவிற்கு உச்சரித்தார் டி.எம்.எஸ்.  ஐம்பது சதவீதம் சிவாஜி கணேசன் அளவுக்கு உச்சரித்தார். அதனால் தான்  இரண்டு மாமன்னர்களும் காலங்கடந்து சென்றாலும், மக்கள் மனதில் பசுமையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

 


 

Next Story

"நிராகரித்தவர்கள் மத்தியில் தன்னை நிரூபித்தவர் விஜய் சேதுபதி" - எழுத்தாளர் சுரா பகிர்ந்த சுவாரசிய தகவல்

Published on 29/09/2022 | Edited on 29/09/2022

 

writer sura about talk vijay sethupathi

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில், நடிகர் விஜய் சேதுபதி குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு....

 

"சாதாரண நிலையில் இருந்து ஒரு உயர்ந்த இடத்திற்கு வந்துள்ள விஜய் சேதுபதியை நீங்கள் ரோல் மாடலாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர் தனது வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளை சந்தித்துள்ளார். தனது சொந்த ஊரான ராஜபாளையத்தில் இருந்து சினிமாவில் பெரிய ஆளாக்கிடனும்னு சென்னைக்கு வருகிறார். அந்த மாதிரி நேரடியா எடுத்த உடனே சினிமாவில் பெரிய ஆளாக்கி முடியாது என்பதை  உணர்ந்த விஜய் சேதுபதி ஒரு சிறிய சிமெண்ட் கம்பெனியில் அக்கவுண்டன்ட்டா வேலைக்கு சேர்ந்து பணி செய்துகொண்டு வருகிறார். அதன்பிறகு  செல்போன் கடை, பாஸ்ட்புட், சேல்ஸ்மேன் என கிடைக்கிற வேலை எல்லாம் செய்து வருகிறார். 

 

அந்த சமயத்தில் ஒரு நாள் விஜய் சேதுபதிக்கு துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் அக்கவுண்டன்ட்டாக நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கிறது. தொடர்ந்து 4 ஆண்டுகள் துபாயில் வேலை பார்த்தார். இதனிடையே ஆன்லைன் மூலம் ஜெஸி என்ற பெண்ணுடன் அறிமுகமாகி அவரையே திருமணமும் செய்துகொண்டார். ஒரு கட்டத்தில் துபாய் வேலையும் அவருக்கு பிடிக்காமல் போக, மீண்டும் சென்னைக்கு வந்து தனது நண்பர்களுடன் இணைந்து இன்டீரியர் டெக்கரேஷன் வேலைகளை செய்து வந்தார். அப்படி இருக்கையில் ஒரு நாள் சினிமாவிற்கு அடித்தளமாக இருக்கும் கூத்துப்பட்டறை போஸ்டர் ஒன்றை பார்க்கிறார். அப்போதும் கூட அந்த கூத்துப்பட்டறையில்  அக்கவுண்டன்ட்டாகத்தான் பணிக்கு சேர்ந்துள்ளார். அதன் பிறகு தான் தனுஷின் புதுப்பேட்டை, கார்த்தியின் நான் மகான் அல்ல, வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட பல படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம். இந்தி என பிறமொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். 

 

ஆனால் விஜய் சேதுபதி 16 வயதில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நம்மவர் படத்தில் நடிப்பதற்காக நேர்காணலுக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கு நிராகரிக்கப்படுகிறார். ஆனால் அவரின் விடா முயற்சியால் அன்று யார் படத்தில் விஜய் சேதுபதி நிராகரிக்கப்பட்டாரோ இன்று அவருடனே விக்ரம் படத்தில் நடித்து பாராட்டுகளை குவித்து இருக்கிறார். அதனால் கடுமையாக உழைத்து முன்னேற வேண்டும் என்று நினைக்க கூடியவர்கள் விஜய் சேதுபதியை ரோல் மாடலாக வைத்துக் கொள்ளலாம்".